ADDED : அக் 03, 2011 11:21 PM
மதுரை:தற்போதைய உள்ளாட்சி தேர்தலில் பெரிய கட்சிகள், தனித்தனியே போட்டியிடுவது வித்தியாசமான காட்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த 'குஸ்தி'யில் ம.தி.மு.க., நிலை என்ன ஆகும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.தி.மு.க., பா.ம.க., பா.ஜ., மார்க்சிஸ்ட் போன்ற கட்சிகளுக்கு, தனியாக போட்டியிட்ட அனுபவம் இருந்தாலும், புதிதாக கட்சி துவக்கப்பட்ட போதே, ம.தி.மு.க.,வுக்கும் தனியாக களம் கண்ட அனுபவம் உள்ளது. 1996ல் முதல் முறையாக ம.தி.மு.க., சட்டசபை தேர்தலை சந்தித்தது.
இதில் மார்க்சிஸ்ட் மற்றும் ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாவிட்டாலும் 5.78 சதவீத ஓட்டுகளை பெற்றது.அடுத்து வந்த 2001 சட்டசபை தேர்தலில், கூட்டணி இல்லாமல் 211 இடங்களில் போட்டியிட்டது. இதிலும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. அப்போது கட்சியின் ஓட்டு சதவீதம் 4.65. 2006ல் அ.தி.மு.க., வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில் 6 இடங்களை கைப்பற்றியது. 2011 சட்டசபை தேர்தலை புறக்கணித்தது. ம.தி.மு.க.,வுக்கு அதே ஓட்டு வங்கி இருக்கிறதா இல்லையா என, உள்ளாட்சி தேர்தல் உணர்த்திவிடும்.


