PUBLISHED ON : செப் 29, 2011 12:00 AM

ம.தி.மு.க., கொள்கை பரப்புச் செயலர் நாஞ்சில் சம்பத், 'குபீர்' சிரிப்பு பேட்டி :நல்லது நடக்கும் என்று இம்முறை எங்களுக்கு மக்கள் ஓட்டளிப்பர். சொல்லப் போனால், இதுவரை ம.தி.மு.க., விதைத்ததன் ஆதாயத்தை, இப்போது அறுவடை செய்யப்போகிறோம்.
மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பேச்சு: இந்தியாவில், சில்லரை பொருட்கள் விற்பனை துறையில், வெளிநாட்டினர் நேரடியாக முதலீடு செய்வதை அனுமதிப்பது தொடர்பான முடிவு விரைவில் மேற்கொள்ளப்படும். இது குறித்து, அரசியல் கட்சிகளுடன் கலந்தாய்வு செய்து கருத்தொற்றுமை காணப்படும்.
மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., பாலபாரதி, 'தமாஷ்' பேச்சு: கூட்டணி அமைத்துப் போட்டியிட்டால் மட்டும் தான் வெற்றி என்பது இல்லை. அதற்கான வாய்ப்பு அமையாவிட்டாலும், அதிக இடங்களில், கம்யூனிஸ்ட் கட்சிகள் வெற்றி பெறும்.
அரசு சம்பளம் தவிர, எந்த வருமானமும் பார்த்திராத, தமிழக அரசுப் பணியாளர் சங்க சார்பில், மாநில தலைவர் பிச்சையப்பா அறிக்கை: அரசுப் பணியாளர்களின் ஊதிய முரண்பாடுகள் தீர்க்கப்படும் என தேர்தல் அறிக்கையில் தமிழக முதல்வர், கூறியுள்ளார். தேர்தல் அறிக்கையை நம்பி அரசுப்பணியாளர்களும் ஓட்டளித்துள்ளனர். தேர்தல்
அறிக்கையில், கூறப்பட்ட பலவற்றை நிறைவேற்றி மக்களிடம் வரவேற்பை பெற்று வரும் நிலையில், அரசுப்பணியாளர்களும் மக்களின் ஒரு பிரிவினர் என்ற வகையில் அகவிலைப்படி உயர்வை பரிசீலிக்க வேண்டும்.
சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவாசகம் பேச்சு: தமிழகத்தில், வாசிப்போர் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. 1942ம் ஆண்டு, 11 சதவீதமாக இருந்த வாசிப்போர் எண்ணிக்கை தற்போது, 92 சதவீதமாக அதிகரித்துள்ளது.
காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் பேச்சு: நாடு மாற வேண்டும் என்றால், உயர்நிலையிலிருந்து மாற்றத்தை எதிர்பார்க்கக் கூடாது. முதலில், கடைநிலையிலிருந்தே மாற்றப்பட வேண்டும். ஊழல் ஒழிய வேண்டும் என்றால், கிராமங்களில் சாதாரண மனிதன் வரை ஜனநாயகம் பரவ வேண்டும்.


