Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/தமிழக அரசு உத்தரவை மீறி தூத்துக்குடி மாவட்ட ரேஷன் கடைகளில் அரிசிக்கு அதிகாரிகள் கிடுக்கிப்படி

தமிழக அரசு உத்தரவை மீறி தூத்துக்குடி மாவட்ட ரேஷன் கடைகளில் அரிசிக்கு அதிகாரிகள் கிடுக்கிப்படி

தமிழக அரசு உத்தரவை மீறி தூத்துக்குடி மாவட்ட ரேஷன் கடைகளில் அரிசிக்கு அதிகாரிகள் கிடுக்கிப்படி

தமிழக அரசு உத்தரவை மீறி தூத்துக்குடி மாவட்ட ரேஷன் கடைகளில் அரிசிக்கு அதிகாரிகள் கிடுக்கிப்படி

ADDED : ஜூலை 24, 2011 01:19 AM


Google News

தூத்துக்குடி : தமிழக அரசின் உத்தரவை மீறி தூத்துக்குடி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் ஏன் அதிகமாக இலவச அரிசி விற்பனையாகி உள்ளது என்று கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கடைக்காரர்களை சென்று நச்சரித்து வருகின்றனர்.

இதனால் ரேஷன் கடை ஊழியர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திக்குமுக்காடி வருகின்றனர். தமிழக அரசு ரேஷன் கடைகளில் 20 கிலோ இலவச அரிசி வழங்கி வருகிறது. மக்கள் மத்தியில் இந்த திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இலவச அரிசி வழங்கப்பட்ட பிறகு ரேஷன் கடைகளில் அரிசி வாங்குவோர் எண்ணிக்கை பரவலாக 20 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது. இதுவரை இல்லாத வகையில் ரேஷன் கடைகளில் அரிசி விற்பனை நடந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ரேஷன் கடைகளில் மாதம் முழுவதும் அரிசி வாங்க வருவோருக்கு இலவச அரிசி வழங்க வேண்டும். அரிசி இல்லை என்கிற சொல்லே இருக்க கூடாது என்று அரசு கண்டிப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது.



அதற்கு ஏற்ப வழக்கமாக அந்த கடைகளில் மக்கள் வாங்கும் அரிசியை விட கூடுதல் ஸ்டாக் அரிசி இருப்பு வைக்கவும் அரசு தெரிவித்து, அதன் அடிப்படையில் அரிசி மூடைகளும் கூடுதலாக கடைகளில் ஸ்டாக் வைக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை இல்லாத வகையில் கடந்த ஜூன் மாதம் மட்டும் மொத்தம் 91 சதவீத வரை அரிசி விற்பனையானது. பொதுவாக இம் மாவட்டத்தில் அதிகப்பட்சமாக 70 சதவீதம் வரை தான் ரேஷன் கடைகளில் அரிசி விற்பனை நடந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 65 சதவீதம், மே மாதம் 70 சதவீதம் அரிசி விற்பனை நடந்தது. அதன் பிறகு இலவச அரிசி வழங்கப்பட்டது. இதனால் 21 சதவீதம் அரிசி விற்பனை அதிகரித்தது. அதே போல் நடப்பு மாதத்திலும் மிக அதிகமாக ரேஷன் கடைகளில் இலவச அரிசி விற்பனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.



மக்கள் இலவச அரிசியை ஆர்வமாக வாங்கி செல்வதால் தான் இந்த அளவிற்கு விற்பனை அமோகமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. அரிசி உள்ள ரேஷன் கார்டிற்கு தான் மிக்சி, கிரைண்டர், பேன் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதுவும் கூடுதல் அரிசி வாங்குவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அத்துடன் அரிசி வாங்காவிட்டால் ரேஷன் கார்டு ரத்தாகி விடும் என்கிற புரளியும் கூறப்படுவதும் கூடுதல் அரிசி விற்பனைக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று பரவலாக கூறப்படுகிறது.பொதுமக்களுக்கு முழுமையாக இலவச அரிசி வழங்க வேண்டும் என்று அரசு தெரிவித்து வரும் நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுத்துறை துணைப்பதிவாளர் ரேஷன் கடைகளுக்கு ஆய்வுக்கு சென்று ஏன் இவ்வளவு அரிசி விற்பனை செய்துள்ளீர்கள். இந்த அளவிற்கு எப்படி விற்பனை நடக்கும் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு ரேஷன் கடைக்காரர்களை கண்டிப்புடன் விசாரணை செய்து வருவதாக ரேஷன் கடை ஊழியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.



அதற்கு அவர்கள் பொதுமக்கள் இலவச அரிசி போடப்பட்ட பிறகு அதிகமாக அரிசி வாங்கி வருவதாக தெரிவித்தும் கூட்டுறவு அதிகாரிகள் அதனை நம்ப மறுப்பதாக கூறப்படுகிறது. இதனால் ரேஷன் கடை ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் கூட ஏற்படுவதாக கூறப்படுகிறது. அரசு இலவச ரேஷன் அரிசியை மாதம் முழுவதும் யாருக்கும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கின்றனர். துணைப்பதிவாளர் ஏன் இவ்வளவு அரிசி விற்பனை நடந்துள்ளது என்று ரேஷன் கடை ஊழியர்களை நம்பாமல் கேட்கின்றனர். இதனால் என்ன செய்வது என்றே தெரியவில்லை. இது சம்பந்தமாக ரேஷன் கடை ஊழியர்கள் சங்கத்தை கூட்டி இந்த பிரச்னைக்கு என்ன செய்யலாம் என்று ஆலோசனை செய்ய முடிவு செய்துள்ளோம்.



தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்து வரும் இந்த பிரச்னை சம்பந்தமாக உணவு வழங்கல் துறை அமைச்சர், கூட்டுறவுத்துறை அமைச்சர், உணவு வழங்கல் துறை செயலாளர், மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு சங்கத்தின் சார்பில் மனு அளிக்கவும் முடிவு செய்துள்ளோம். மாநில சங்க நிர்வாகிகள் மூலம் அமைச்சரை நேரில் சந்தித்து முறையிடவும் ஏற்பாடு செய்து வருவதாக ரேஷன் கடை ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.தூத்துக்குடி மாவட்டத்தில் அரிசி விற்பனை குறித்து எழுந்துள்ள இந்த திடீர் பிரச்னை புதிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மாவட்ட நிர்வாகம் இது குறித்து விசாரணை செய்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ரேஷன் கடை ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us