ADDED : ஜூலை 29, 2011 01:22 AM
இடைப்பாடி: இடைப்பாடியில், நகராட்சி ரோடு போடுவது சம்பந்தமாக இரு
பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இடைப்பாடி நகராட்சி பகுதியில், புனித
செல்வநாயகி கிறிஸ்துவ ஆலயம் உள்ளது. இந்த ஆயலத்தை சுற்றி அரசுக்கு சொந்தமான
தோப்பு புறம்போக்கு நிலமும், கிறிஸ்துவ ஆலயத்துக்கு சொந்தமான நிலமும்
உள்ளது. இந்த ஆலயத்தையொட்டி சிவகாமி நகர், கோவிந்தசாமி நகர், ராமமூர்த்தி
நகர் ஆகிய தெருக்கள் உள்ளது. இந்த பகுதிகளுக்கு செல்ல ஆலயத்தை ஒட்டி
மண்ரோடு உள்ளது. மண் ரோட்டை புதுப்பிக்க நகராட்சியினர் முயற்சி செய்வதாக
கூறப்படுகிறது. இந்நிலையில், 'மண்ரோடு உள்ள பகுதி கிறிஸ்துவ ஆலயத்தின்
பெயரில் உள்ளது. அதனால், ரோடு வழியாக யாரும் செல்லக்கூடாது' என ஆலய
பங்குத்தந்தை பாதர் ஜேக்கப் கூறியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிவகாமி
நகர், ராமமூர்த்தி நகர், கோவிந்தசாமி நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார்,
50க்கும் மேற்பட்ட பொதுமக்கள், இடைப்பாடி தாசில்தார் பிரபாகரனிடம் புகார்
கொடுத்துள்ளனர். இதுகுறித்து புகார் கொடுத்த பொதுமக்கள் கூறியதாவது: எங்கள்
குழந்தைகள் கிறிஸ்துவ ஆலயத்தின் அருகில் சென்று விளையாட கூட அனுமதிப்பது
இல்லை. தலைமுறையாக இருந்த பாதர்கள் யாரும் இவ்வாறு சொன்னது இல்லை. இப்போதைய
பாதர் ஜேக்கப், இங்கு வந்த பின்புதான் எங்களுக்குள் பிரிவினை
ஏற்படுத்துகிறார். இவ்வாறு அவர்கள் கூறினர். இது குறித்து பாதர்
ஜேக்கப்பிடம் கேட்டபோது,''பொதுமக்கள் நடந்து செல் இதுவரை நாங்கள் எந்த
தடையும் விதிக்கவில்லை. ரோடு போடுகிறோம் என யாரும் எங்களிடம் இதுவரை
கேட்கவில்லை. எங்கள் பள்ளி காம்பவுண்ட்டை ஒட்டி தனபால் என்பவர் கட்டிடம்
கட்டியுள்ளார். அதை எடுக்கச் சொன்னதால், பிரச்னையை திசை
திருப்புகின்றனர்,'' என்றார்.


