ADDED : ஆக 29, 2011 12:11 AM
மதுரை : திருவாதவூரில் அரசு உயர்நிலை பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை அப்புறப்படுத்தக் கோரி மாணவர்கள் தந்தி அனுப்பினர்.திருவாதவூரில் ஏற்கனவே அரசு டாஸ்மாக் மதுபானக்கடை மாணிக்கவாசகர் தெருவில் இயங்கியது.
சில மாதங்களுக்கு முன், அதை மதுரை மெயின் ரோட்டிற்கு மாற்றினர். இதன் அருகில் அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. மேலும் பஸ் ஸ்டாப், வர்த்தக நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளன. மதுக்கடைக்கு வரும் குடிமகன்கள், போதையில் மெயின் ரோட்டில் விழுந்து கிடக்கின்றனர். அடிக்கடி தகராறில் ஈடுபடுகின்றனர். இதனால் அவ்வழியாக செல்வதற்கு மாணவிகள் அச்சப்படுகின்றனர். தேவையின்றி சட்டம் ஒழுங்கு பிரச்னையும் ஏற்படுகிறது.மதுபானக் கடையை வேறிடத்திற்கு மாற்ற கோரி அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், நடவடிக்கை இல்லை. பின், ஐகோர்ட் கிளையில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. கடையை அகற்ற ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. இருப்பினும் மதுக்கடையை மாற்றுவதில் தாமதம் நிலவுகிறது. ஏற்கனவே கலெக்டரிடம் மாணவர்கள் மனு கொடுத்தனர். அடுத்தகட்டமாக டாஸ்மாக் மண்டல மேலாளர், கலெக்டருக்கு தந்தி அனுப்பினர். அடுத்து, கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடரப்படும் எனவும் கிராமத்தினர் அறிவித்துள்ளனர். அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


