ADDED : செப் 07, 2011 02:47 AM
மதுரை : ''பாலே நடனத்தில் ராமாயண நாடகம், ஒடிசி நடனம்'' என, மதுரையில் முதன்முறையாக இசைநிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இதுகுறித்து 'என் மதுரை' அமைப்பின் தலைவர் கார்மேக மணி, செயலாளர் கண்ணன், கலைவிழா தலைவர் கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் ராஜாகோவிந்தசாமி கூறியதாவது:மதுரை ரோட்டரி கிளப்களின் சார்பில் 'என் மதுரை' அமைப்பு செயல்படுகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரோடு விழிப்புணர்வு குறித்து 'சிமுலேட்டர்' மூலம் விரைவில் பயிற்சி அளிக்க உள்ளோம். மதுரையின் சுற்றுச்சூழலை மாற்றி பசுமையாக்குவது, மேம்பாட்டு திட்டங்களை உருவாக்குவது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். மதுரை மக்களுக்கு இசையின் வித்தியாச பரிமாணங்களை வெளிப்படுத்தும் வகையில் நாளை முதல் செப்., 14 வரை இசைநிகழ்ச்சி நடத்தப்படுகிறது, என்றனர். நாளை சென்னை சஞ்சய் சுப்ரமணியன் வழங்கும் கர்நாடக இசைப்பாட்டு, 9ல் கட்டாக் கஞ்சன் நடன அகாடமி வழங்கும் 'ஒடிசி' குழு நடனம், 10ல் டில்லி சவிதா சாஸ்திரியின் பரதம், 11ல் திருவனந்தபுரம் மிதிலாலயா வழங்கும் ராமாயண 'நாடக பாலே' நடனம், 12ல் பெங்களூரு வீணா, தான்யா சகோதரிகளின் மோகினியாட்டம், 13ல் டில்லி ராமவைத்தியநாதனின் பரத நிகழ்ச்சிகள் மதுரை மடீட்சியா ஹாலில் மாலை 6.30 மணிக்கு நடக்கிறது. செப்., 14 மாலை 6.30 மணிக்கு, மதுரை பார்சூன் பாண்டியன் ஓட்டலில் ரமேஷ் நாராயண் குழுவினரின் இந்துஸ்தானி பாடலிசை நடக்கிறது. இதற்கான அனுமதிச் சீட்டு மடீட்சியா ஹாலில் கிடைக்கும்.


