ஆயிரம் ரூபாய் நாணயங்கள் அச்சிட அனுமதி
ஆயிரம் ரூபாய் நாணயங்கள் அச்சிட அனுமதி
ஆயிரம் ரூபாய் நாணயங்கள் அச்சிட அனுமதி
ADDED : ஆக 12, 2011 01:24 AM
புதுடில்லி:ஆயிரம் ரூபாய் நாணயங்கள் அச்சிடுவதற்கு, பார்லிமென்டில் நேற்று
அனுமதி அளிக்கப்பட்டது.ஆயிரம் ரூபாய் நாணயங்களை அச்சிட வகை செய்யும், நாணய
மசோதா, எந்த விவாதமும் இன்றி, லோக்சபாவில் கடந்த மார்ச்சில்
நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், ராஜ்யசபாவிலும் இந்த மசோதா
நிறைவேற்றப்பட்டு, ஆயிரம் ரூபாய் நாணயங்களை அச்சிடுவதற்கு, பார்லிமென்டில்
நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டது.இது தொடர்பாக, ராஜ்யசபாவில் நேற்று மத்திய
நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசியதாவது:ஆயிரம் ரூபாய் நாணயங்கள்
அச்சிடுவதற்கு, தற்போது அனுமதி மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. இந்த நாணயங்கள்
எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்பது குறித்து, தற்போது தெரிவிக்க
முடியாது. கள்ள ரூபாய் நோட்டுகளை ஒழிப்பது, நமக்கு மிகப் பெரிய சவாலாக
உள்ளது.இந்தியாவின் பொருளாதாரத்தைச் சீர்குலைப்பதற்காக, சில நாடுகள்,
இதுபோன்ற முயற்சிகளை மேற்கொள்கின்றன. அது எந்த நாடு என்பதைத் தெரிவிக்க
விரும்பவில்லை. அது பற்றி அனைவருக்கும் தெரியும்.
மேலும், வங்கிப்
பரிவர்த்தனைகளின்போது, ஒருவர் ஆயிரம் ரூபாய்க்கு மேல் நாணயமாகச் செலுத்தக்
கூடாது என, ரிசர்வ் வங்கி ஆலோசனை கூறியுள்ளது. நாணயங்களை உருக்குவது போன்ற,
சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுவோருக்கு, ஏழு ஆண்டு சிறைத் தண்டனை
விதிக்க, நாணய மசோதா வகை செய்கிறது.
ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை அச்சிட்டுத் தரும் பணிகளை,
வெளிநாடுகளுக்குக் கொடுப்பதற்கு, அனைத்துக் கட்சி உறுப்பினர்களும்
எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த விஷயம்
என்பதையும், நாட்டின் பெருமை தொடர்பான விஷயம் என்பதையும், ஏற்றுக்
கொள்கிறேன். ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்கான, காகிதங்களைத் தயாரிக்கும்
விஷயத்தில், தன்னிறைவு அடைவதற்கு முயற்சித்து வருகிறோம்.இவ்வாறு, பிரணாப்
முகர்ஜி கூறினார்.


