சாத்தியக்கூறுகள் இருக்கிற இடத்தில் மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்படும்: முதல்வர் உறுதி
சாத்தியக்கூறுகள் இருக்கிற இடத்தில் மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்படும்: முதல்வர் உறுதி
சாத்தியக்கூறுகள் இருக்கிற இடத்தில் மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்படும்: முதல்வர் உறுதி
ADDED : செப் 07, 2011 11:15 PM
சென்னை: ''கடற்கரையில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பைத் தடுக்க, தூண்டில் வளைவு மற்றும் சாத்தியக்கூறுகள் உள்ள இடங்களில், மீன்பிடித் துறைமுகங்கள் அமைத்துத் தரப்படும்,'' என, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்தார்.
சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது, இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் உலகநாதன், திருத்துறைப்பூண்டி தொகுதியில் மீன்பிடித் துறைமுகங்கள் அமைப்பது குறித்த ஒரு கேள்வியை எழுப்பினார்.
அப்போது குறுக்கிட்டு, முதல்வர் ஜெயலலிதா பேசும்போது, ''தமிழகத்தில் 1,076 கி.மீ., தூரத்திற்கு கடற்கரை இருக்கிறது. இந்த கடற்கரையில், பல இடங்களில் கடல் அரிப்பு ஏற்படுகிறது. எங்கெல்லாம் கடல் அரிப்பு தொல்லை இருக்கிறதோ, அந்த இடங்களில் தூண்டில் வளைவு அமைத்து கொடுப்பது இந்த அரசின் திட்டம்.
நான்கு லட்சம் குடும்பங்கள் மீன்பிடித் தொழிலை நம்பி இருக்கின்றன. கடற்கரையில் எங்கெல்லாம் சாத்தியக்கூறுகள் இருக்கிறதோ, அங்கெல்லாம் மீன்பிடித் துறைமுகங்கள் ஐந்தாண்டு காலத்தில் நிறைவேற்றித் தரப்படும்,'' என்றார்.


