Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/போலி தங்க காசுகள் கொடுத்து நூதன மோசடி : தொடரும் வடநாட்டு கும்பலின் கைவரிசை

போலி தங்க காசுகள் கொடுத்து நூதன மோசடி : தொடரும் வடநாட்டு கும்பலின் கைவரிசை

போலி தங்க காசுகள் கொடுத்து நூதன மோசடி : தொடரும் வடநாட்டு கும்பலின் கைவரிசை

போலி தங்க காசுகள் கொடுத்து நூதன மோசடி : தொடரும் வடநாட்டு கும்பலின் கைவரிசை

ADDED : ஆக 11, 2011 10:39 PM


Google News

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் போலி தங்க காசுகளை கொடுத்து, வாலிபரிடம் செயின், மொபைல் போனை பறித்து சென்ற சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.

ராமநாதபுரம் திருப்பாலைக்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமநாதன். இவர் மலேசியாவில் பணிபுரிந்து வந்தார். கடந்த 20 நாட்களுக்கு முன், இவருக்கு திருமணம் நடந்தது. கடந்த 10ம் தேதி ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வடநாட்டு வாலிபர் உட்பட மூன்று பேர் இவரிடம், 'சிங்கப்பூரில் இருப்பதாகவும், விபத்தில் தாயின் கால் உடைந்து ஆஸ்பத்திரியில் உள்ளார். மொழி தெரியாததால், மருத்துவமனைக்கு வந்து சிகிச்சைக்கு உதவுமாறு வேண்டினர். இதை நம்பிய ராமநாதனை, ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயில் பின்புறம் உள்ள தெருவுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மற்ற இரண்டு பேரும், வடநாட்டு ஆசாமியிடம், 80 ஆயிரம் ரூபாயை கொடுத்து, அவரிடம் இருந்த எல்.சி.டி., 'டிவி,' 10 தங்க காசுகள், மொபைல் போனை வாங்கிக் கொண்டனர். ராமநாதனிடம், 'நாங்கள் 80 ஆயிரம் கொடுத்து, ஒரு லட்சத்துக்கும் மேலான பொருட்களை வாங்கி விட்டோம். நீயும் தங்க காசுகளை வாங்கி விடு, என மற்ற இருவரும் கூறினர். பின்னர், ராமநாதனின் கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை பவுன் செயின், கைச்செயின், மோதிரம் என ஆறு பவுன் நகைகளையும், 20 ஆயிரம் மதிப்புள்ள மொபைல் போன் ஆகியவற்றை, கண்ணிமைக்கும் நேரத்தில் கழற்றினர். அதற்கு பதிலாக 17 தங்க காசுகளை கொடுத்து விட்டு சென்றனர். ராமநாதன் தாயாரிடம் தங்க காசுகளை காண்பித்தபோது, அவை போலி என தெரியவந்தது. இதையடுத்து அவர், ராமநாதபுரம் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் கொடுத்தார். பஜார் போலீசார் விசாரித்து வருகின்றனர். தொடரும் மோசடி: கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே போல் தான், போலி காசுகளை கொடுத்து வாலிபர் ஒருவரிடம் மூன்று பவுன் நகைகளை பறித்து சென்றனர். இதுவரை அந்த குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்படவில்லை. எல்லை பிரச்னை: ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்ட் பகுதி, 5 கி. மீ., தூரத்தில் உள்ள கேணிக்கரை போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்டது. ஆனால், பஸ் ஸ்டாண்டிலிருந்து 50 மீட்டர் தொலைவில் பி.1 ஸ்டேஷன் உள்ளது. இருந்தாலும் எந்த ஸ்டேஷனுக்கு உட்பட்டு சம்பவம் நடந்தது என்பதை அறியாத பாதிக்கப்படும் வெளியூர்காரர்கள் பி.1 ஸ்டேஷனில் புகார் கொடுத்தால், அதை வாங்க மறுக்கின்றனர். இதனால் மக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us