ADDED : ஆக 20, 2011 11:33 PM
பொங்கலூர்:மக்காச்சோளத்துக்கு விலை உயர்வால், பொங்கலூர் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.மக்காச்சோளம் வைகாசி, ஆடி,
கார்த்திகை ஆகிய பருவங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. வழக்கமாக வட கிழக்கு
பருவ மழை பெய்யும் ஆடி பட்டத்தில் அதிகமான விவசாயிகள் மக்காச்சோளம்
சாகுபடி செய்வது வழக்கமாக உள்ளது. இந்த சீசனில் அதிக உற்பத்தி காரணமாகவும்,
புற்கள் வளர்ந்து கால்நடை தீவனத்திற்கான தேவை குறைவதாலும், மக்காச்சோளம்
கொள்முதல் விலை ஒரு குவிண்டால் 900 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாய்க்குள்
இருக்கும். தற்போது, வைகாசி பட்டத்தில் சாகுபடி செய்த மக்காச்சோளம் அறுவடை
பருவத்தை எட்டியுள்ளது.
இந்த பட்டத்தில் உற்பத்தி குறைவாக உள்ளது; பெருகி
வரும் ஈமு, பிராய்லர் கோழி பண்ணை நுகர்வு காரணமாகவும், மழை பெய்யாததால்
ஏற்பட்ட வறட்சியாலும், விவசாயிகள் கால்நடை தீவனத்திற்கு அதிகமாக
மக்காச்சோளத்தை உபயோகிக்கின்றனர். இதனால் மக்காச்சோளம் தேவை
அதிகரித்துள்ளது.
அதிகரித்து வரும் நுகர்வு, உற்பத்தி குறைவு உள்ளிட்ட காரணங்களால்,
மக்காச்சோளத்திற்கு விலை உயர்ந்து வருகிறது. தற்போது ஒரு குவிண்டால்
மக்காச்சோளம் 1,300 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள்
மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


