/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/போக்குவரத்து நெரிசலை தவிர்க்க "ரிங் ரோடு': அ.தி.மு.க., வேட்பாளர் உறுதிபோக்குவரத்து நெரிசலை தவிர்க்க "ரிங் ரோடு': அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க "ரிங் ரோடு': அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க "ரிங் ரோடு': அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க "ரிங் ரோடு': அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி
ADDED : அக் 05, 2011 02:16 AM
பொள்ளாச்சி : ''கனரக வாகனங்கள் நகருக்குள் வருவதால் ஏற்படும் போக்குவரத்து
நெரிசலை தவிர்க்க 'ரிங் ரோடு' அமைக்கப்படும்,'' என அ.தி.மு.க., வேட்பாளர்
கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.
பொள்ளாச்சி நகராட்சி தலைவர் பதவிக்கு
போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் கிருஷ்ணகுமார், தேர்தல் அறிக்கை பற்றி
நிருபர்களிடம் கூறியதாவது: நகராட்சி தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு மக்கள்
ஆதரளித்து வெற்றி பெறச்செய்தால், முதல்வர் அறிவிக்கும் திட்டங்களை
பொள்ளாச்சிக்கு முழுமையாக பெற்றுக்கொடுப்பேன். பொள்ளாச்சியில் அனைத்து
வார்டுகளிலும் 24 மணி நேரத்திற்கு ஒருமுறை சீரான குடிநீர் வினியோகம்
செய்யப்படும். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் கண்டு மகிழும்
பொழுதுபோக்கு வசதிகளுடன் கூடிய பூங்கா அமைப்பேன். பொள்ளாச்சியில்
போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முக்கிய ரோடுகளில் வாகனங்கள் நிறுத்த இடம்
ஒதுக்கப்படும். நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் எம்.பி., எம்.எல்.ஏ.,
மற்றும் பொதுநல அமைப்புகளில் நிதி உதவி பெற்று நவீன வசதிகளுடன் விளையாட்டு
அரங்கம் அமைக்கப்படும். பொள்ளாச்சி காந்தி வாரச்சந்தை அருகிலுள்ள காய்கறி
மார்க்கெட்டில் பழைய கட்டடத்தை அகற்றி நவீன வசதிகளுடன் கட்டடம்
கட்டப்படும். கனரக வாகனங்கள் நகருக்குள் வருவதால் ஏற்படும் போக்குவரத்து
நெரிசலை தவிர்க்க 'ரிங் ரோடு' அமைக்கப்படும். லாரிப்பேட்டையில் தார் ரோடு
போட்டு, தெருவிளக்கு வசதி, டிரைவர் கிளினர்கள் தங்குவதற்கு ஓய்வறை
அமைக்கப்படும். நகராட்சிக்கு இணையதள வசதி ஏற்படுத்தி சேவைகள், விதிமுறைகள்
வெளியிடப்படும். பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் 24 மணி நேரத்தில்
வழங்கப்படும். நகராட்சி நிர்வாகம் ஊழலின்றி திறந்த புத்தகமாக இருக்கும்.
நந்தனார் காலனியில் வசிக்கும் மக்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கப்படும்,
பாதாள சாக்கடை கொண்டு வரப்படும், மரப்பேட்டை பள்ளம் பிரச்னைக்கு நிரந்தர
தீர்வு காணப்படும். மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு வணிக வளாகம்
அமைக்கப்படும். நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி இடத்தை வணிக வளாகம் கட்ட
தி.மு.க., ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்து, அரசு
மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இடம் ஒப்படைக்கப்படும். கூடுதல் துப்புரவு
பணியாளர்களை நியமித்து குப்பை முழுமையாக அகற்றப்பட்டு, குப்பையில்லாத
முன்மாதிரி நகரமாக மாற்றப்படும். நகராட்சியில் மாதம் ஒருமுறை நகரின்
வளர்ச்சிக்கான ஆலோசனை கூட்டம் நடத்தப்படும். பொள்ளாச்சியில் அரசு
கலைக்கல்லூரி, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க நடவடிக்கை
எடுக்கப்படும். இவ்வாறு, நிருபர்களிடம் தெரிவித்தார்.


