ADDED : ஆக 01, 2011 11:45 PM
கூடலூர் : கூடலூர் பகுதியில் இரண்டு சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டுள்ளன.நீலகிரி மாவட்டம் கூடலூர், மசினகுடி பகுதிகளில் முன்பு ஏராளமான சந்தன மரங்கள் இருந்தன; கடத்தல் கும்பல் கைவரிசையால் பெருமளவில் அழிக்கப்பட்டு விட்டன.
குறிப்பிட்ட சில பகுதிகளில், சிறிய சந்தன மரங்கள் மட்டுமே உள்ளது. சில நாட்களுக்கு முன், முதுமலை புலிகள் காப்பகம் மசினகுடி வனச் சோதனை சாவடி அருகே இருந்த சந்தன மரத்தை வெட்டி கடத்தியுள்ளனர். இது தொடர்பாக, இருவரை வனத்துறையினர் கைது செய்தனர். தற்போது கோக்கால் அருகேயுள்ள தனியார் காபி தோட்டத்தை ஒட்டி சாலையோரத்தில் இருந்த இரு சந்தன மரங்களை இரு நாட்களுக்கு முன் வெட்டி கடத்தியுள்ளனர். இதில், ஒரு மரத்தை வேருடன் தோண்டி எடுத்துள்ளனர். கூடலூர் வன அலுவலர் தீபக் பில்ஜி உத்தரவுப்படி, வனவர் பெருமாள் மற்றும் வன ஊழியர்கள் நேற்று அப்பகுதிக்கு சென்று பார்வையிட்டனர்.


