லோக் ஆயுக்தா அமைப்பதை மாநில அரசு முடிவுக்கு விட்டுவிடுங்கள்'
லோக் ஆயுக்தா அமைப்பதை மாநில அரசு முடிவுக்கு விட்டுவிடுங்கள்'
லோக் ஆயுக்தா அமைப்பதை மாநில அரசு முடிவுக்கு விட்டுவிடுங்கள்'

புதுடில்லி : ''பிரதமர் பதவியை லோக்பால் விசாரணை வரம்பிற்குள் கொண்டு வரக்கூடாது.
லோக்பால் மசோதா தொடர்பான விவாதம் நேற்று லோக்சபாவில் நடைபெற்ற போது எம்.பி.,க்கள் பேசியதாவது: சந்தீப் தீட்சித் - காங்: பிரதமர் பதவியை லோக்பால் விசாரணை வரம்பிற்குள் கொண்டு வருவதில் சற்று குழப்பம் இருந்தது. இப்போது, அதில் ஆட்சேபனை இல்லை. நீதித் துறைக்கு என, தனி அமைப்பை உருவாக்கி கொள்ளலாம். கீழ்மட்ட அதிகாரிகளையும், லோக்பால் வரம்பிற்குள் கொண்டு வருவதே சரி. சாமான்ய மக்கள் அவர்களால் தான் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். கம்பெனிகளையும், அரசு சார்பற்ற அமைப்புகளையும் லோக்பால் வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும்.
சரத் யாதவ் - ஐக்கிய ஜனதா தளம்: நாட்டில் எந்தச் சம்பவங்களும், கடந்த 20 நாட்களாக நடக்காதது போல, தொலைகாட்சிகள் செய்தி வெளியிடுகின்றன. இது தவறான போக்கு. இதை, 'டிவி'க்கள் தவிர்க்க வேண்டும். எம்.பி.,க்களை கெரோ செய்திட வேண்டுமென்றெல்லாம் பேசுகின்றனர். இதுவும் ஆபத்தானது. பார்லிமென்ட் ஜனநாயகத்திற்கு ஊறுவிளைவித்து விடும். அன்னா ஹசாரேயின் கோரிக்கைகள் நியாயமானவை. அதை ஏற்கிறோம். அதே நேரத்தில், பார்லிமென்டின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கும் நடவடிக்கைகளை அவர் தவிர்த்திட வேண்டும்.
ரியோத்தி ராமன் சிங் - சமாஜ்வாடி: மீடியாக்களையும் லோக்பால் வரம்பிற்குள் கொண்டு வந்தாக வேண்டும்.
தாராசிங் சவுகான் - பகுஜன் சமாஜ்: அம்பேத்கர் உருவாக்கிய சட்டத்தின் அடிப்படையில் தான், இந்த பார்லிமென்டே உருவானது. எனவே, பார்லிமென்டை விமர்சிக்கும் நோக்கில், பேசும் கருத்துக்களை ஏற்க இயலாது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு லோக்பால் வரைவு மசோதா குழுவில் இடம் அளிக்க வேண்டும்.
தம்பிதுரை - அ.தி.மு.க: பிரதமர் பதவியை எக்காரணம் கொண்டும். லோக்பால் விசாரணை வரம்பிற்குள் கொண்டு வரக்கூடாது. இதுவே அ.தி.மு.க.,வின் நிலை; அதையே இங்கும் வலியுறுத்துகிறேன். லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்குவதா; வேண்டாமா என்பதில் மத்திய அரசு தலையிடக்கூடாது. கூட்டாட்சி தத்துவத்திற்கே அது ஆபத்தை விளைவித்து விடும். அதிகாரங்களை எல்லாம் மத்திய அரசே வைத்துக் கொள்ளும் போக்கை கைவிட வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மாநிலங்களிலும் உள்ளனர். அவர்களுக்கு என, அதிகாரம் உள்ளது. மாநில அரசின் அதிகாரங்களை பறிக்கும் எந்த நடவடிக்கையிலும் மத்திய அரசு இறங்கக் கூடாது.
காங்கிரஸ் கட்சி கூட, பிரதமர் பதவியை லோக்பால் விசாரணை வரம்பிற்குள் கொண்டு வர சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், அ.தி.மு.க., அதற்கு மாறான கருத்தை கூறியுள்ளது.
நமது டில்லி நிருபர்


