ADDED : ஆக 25, 2011 11:51 PM
திருப்பூர் : குளிர்பதன அறை இல்லாததால், விற்பனையாகாத காய்கறிகளை சேமித்து
வைக்க முடியாமல் உழவர் சந்தை விவசாயிகள் கலக்கம் அடைகின்றனர். நியாயமான
விலை கிடைத்தும், அதிகளவு காய்கறிகள் வீணாவது உழவர் சந்தை விவசாயிகளுக்கு
நஷ்டத்தையே ஏற்படுத்துகிறது. திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு,
தெற்கு, காங்கயம், பல்லடம், உடுமலை ஆகிய இடங்களில் உழவர் சந்தைகள்
அமைக்கப்பட்டுள்ளன. விற்பனை கமிஷன், போக்குவரத்து செலவு இல்லாததால், உழவர்
சந்தையில் விற்பனை செய்வதற்கு அதிகளவு விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
தினமும் 30 முதல் 60 டன் வரை காய்கறி உழவர் சந்தைக்கு விற்பனைக்கு
வருகிறது. அதிகாலையில் துவங்கும் வர்த்தகம் காலை 10.00 மணியுடன்
முடிகிறது.பெரும்பாலான உழவர் சந்தைகளில் காய்கறிகளை பதப்படுத்தும்
குளிர்சாதன அறை அமைக்கப்பட வில்லை; குளிர்சாதன வசதி செய்யப்பட்ட சில
சந்தைகளிலும், பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.தக்காளி,
கத்தரி, வெண்டை என விற்பனை இன்றி தேக்கம் அடையும் காய்கறிகளை பதப்படுத்தி,
மறுநாள் விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். அதிகபட்சம்
ஒருநாள் வைத்திருந்தாலே, பெரும்பாலான காய்கறிகள் அழுகியும், தரம்
குறைந்தும் விடுகின்றன. பெருமளவு காய்கறிகள் அழுகி விடுவதால், மறுநாள்
குப்பையில் போட வேண்டியுள்ளது. அழுகாமல் தப்பும் காய்கறிகளை பதப்படுத்தாமல்
வைத்து விற்பனை செய்யும்போது, அவற்றின் தரம் குறைவதால், நுகர்வோர்
விரும்பி வாங்குவது இல்லை; வீடுகளுக்கு எடுத்துச்சென்று கால்நடை
களுக்கு உணவாகவும், அக்கம்பக்கத்தினருக்கு இனாமாகவும் கொடுக்க வேண்டிஉள்ளது. விளைபொருட்களுக்கு
நியாயமான விலை கிடைத்தாலும், பதப்படுத்தும் வசதி இல்லாமல் அதிகளவு
காய்கறிகள் வீணாவதால், உழவர் சந்தை விவசாயிகள் நஷ்டம் ஏற்படுவதாக கவலை
அடைகின்றனர்.


