Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/"நூலகத்துக்கு சென்றால் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும்'

"நூலகத்துக்கு சென்றால் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும்'

"நூலகத்துக்கு சென்றால் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும்'

"நூலகத்துக்கு சென்றால் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும்'

ADDED : செப் 08, 2011 02:16 AM


Google News

திருப்பூர் : ''நூலகத்துக்கு செல்வது வாழ்வில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.

நல்ல புத்தகங்கள் படிப்பினையை கற்றுக்கொடுத்து, மாணவர்களுக்கு முழுமையான அறிவுலகத்தை அளிக்கும்,'' என எஸ்.பி., பாலகிருஷ்ணன் பேசினார்.திருப்பூர் கதிரவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. தாளாளர் கதிரவன் பழனிசாமி தலைமை வகித்தார். இணை செயலாளர் இந்திராணி குத்துவிளக்கேற்றினார். பள்ளி முதல்வர் ஜெயசாந்தி ஆண்டறிக்கை வாசித்தார். பிரைமரி பள்ளி முதல்வர் நிர்மலா வரவேற்றார்.



எஸ்.பி., பாலகிருஷ்ணன் பேசியதாவது: பள்ளி பருவத்தில் மாணவர்களின் மனநிலை பெற்றோர்,



ஆசிரியர்களின் அறிவுரைகளை உள்வாங்கிக் கொண்டு, அதை பின்பற்றும் கண்ணோட்டத்தில் இருக்கும். பள்ளி பருவத்தில் மாணவர்களை எளிதாக மாற்றலாம். அத்தகைய பள்ளி பருவத்தில், மாணவர்கள் மனதில் நல்ல விதைகளை விதைத்தால், எதிர்காலத்தில் சமூகத்துக்கு பயன்படக்கூடிய பெரிய விருட்சமாக வளர்வர். சமுதாயத்துக்கும், மக்களுக்கும் பயன்படக்கூடிய நல்ல மாணவர்களை உருவாக்குவது, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடம் உள்ளது.கல்வி என்பது பள்ளி, கல்லூரி வகுப்பறை படிப்புடன் முடிவதில்லை. ஒரு மனிதன் உலகில் பிறப்பது முதல், உயிர் பிரியும் வரை கற்றலில் ஈடுபடுகிறான். வயதின் அடிப்படையில் கல்வி நிறுத்தப்படுவதில்லை. மாணவர்கள் கற்பது கல்வியின் ஒரு முகம் மட்டுமே; சமுதாயத்தில் அன்றாடம் ஏற்படும் மாற்றம், சக மனிதர்களின் செயல்பாடு, இயற்கை நிகழ்வுகள் இவற்றை பார்த்து தொடர்ந்து, கற்றல் நிகழ்கிறது.நூலகத்துக்கு செல்வது வாழ்வில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். கதை, கருத்து என எந்த புத்தகமாக இருப்பினும், நல்ல புத்தகங்கள் படிப்பினையை கற்றுக்கொடுக்கும். அறியாத விஷயங்களை கண்முன்னே நிறுத்தி, ஆர்வத்தை தூண்டும். நூலகம் மாணவர்களுக்கு முழுமையான அறிவுலகத்தை அளிக்கும். நம்மை சுற்றி நடப்பதை கூர்ந்து நோக்கும் ஆற்றல் மாணவர்களுக்கு இருக்க வேண்டும். அந்த ஆற்றல் ஒரு விஷயத்தை பார்த்ததும், கேட்டதும் உணர்ந்து கொள்ள உதவும். அதேபோல், ஆசிரியர் மற்றும் பெற்றோருக்கும் கூட, இத்திறன் அவசியம். இது, மாணவர்களின் திறனை கண்டுபிடிக்கும் சக்தி தரும். ஒரு மாணவன் நன்றாக விளையாடுகிறான் என்றால், அவனை பெற்றோர் அத்துறையில் பயணிக்க உதவ வேண்டும்; கட்டுப்படுத்தக்கூடாது.பாடத்தை ஆழமாக புரிந்துகொள்தல் மிகவும் அவசியம். பாடப்புத்தகம் என்பது பரீட்சைக்காக மட்டும் படிக்கக்கூடியதாக இருந்தால், பாடத்தை சார்ந்த இதர புத்தகங்களையும் நூலகங்களில் படித்து மாணவர்கள் தங்கள் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு, பாலகிருஷ்ணன் பேசினார்.விடுப்பின்றி பள்ளிக்கு வந்த மாணவர்கள், தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள், அதிக மதிப்பெண் பெற வைத்த ஆசிரியர்கள் உள்ளிட்டவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. எஸ்.பி., பாலகிருஷ்ணன், மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கி பாராட்டினார். தொடர்ந்து, மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.பள்ளி செயலாளர் நாராயணமூர்த்தி, வக்கீல் ரங்கநாதன், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர், பெற்றோர் பங்கேற்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us