ADDED : ஆக 19, 2011 01:35 AM
ஆனைமலை:ஆனைமலை அருகே கெங்கம்பாளையம் கிராமத்தில் ரோட்டோரத்தில் இருந்த 11 அடி நீள மலைப்பாம்பை மீட்டு வனத்துறையினர் வனப்பகுதியில் விட்டனர்.பெத்தநாயக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கெங்கம்பாளையம் கிராமத்தில் ரோட்டோரத்தில் இருந்த மலைப்பாம்பை பார்த்த ஊராட்சி தலைவர் லோகநாதன் பொள்ளாச்சி வனச்சரக அலுவலருக்கு தகவல் கொடுத்தார்.பொள்ளாச்சி வனச்சரக அலுவலர் வீரமணி உத்தரவின் பேரில் வனக்காப்பாளர்கள் ரமேஷ், சிவக்குமார், வனக்காவலர்கள் சந்திரசேகரன், மதிவாணன் மற்றும் வேட்டைதடுப்பு காவலர் காளிதாஸ் ஆகியோர் ரோட்டோரத்தில் இருந்த மலைப்பாம்பை மீட்டனர்.
வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, பெத்தநாயக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கெங்கம் பாளையம் பகுதியில் பாலாறு செல்கிறது. இதன் அருகில் உள்ள ரோட்டோரத்தில் மலைப்பாம்பு இருந்தது. அதை மீட்டு ஆழியார் வனப்பகுதியில் விட்டுவிட்டோம். மலைப்பாம்பு 11 அடி நீளம் இருக்கும். மழைக்காலம் என்பதால் ஆற்று நீரின் வழியாக வந்திருக்கலாம் என்றனர்.


