ADDED : செப் 04, 2011 12:21 AM

நீலகிரி மாவட்டத்தில், பரவலாகப் பெய்து வரும் மழையால், அணைகளில் தண்ணீர் அளவு உயர்ந்து வருகிறது. குந்தா, மாயார் அணைகள் முழு கொள்ளளவை எட்டின. மழையால் தண்ணீர் வரத்து அதிகரித்து, தடையின்றி மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருவதாக, மின் வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முக்குறுத்தி அணை, 18 அடியில் 17.5 அடியும், குந்தா அணை, 89 அடி முழுவதுமாகவும் நிரம்பியுள்ளன. பொள்ளாச்சி: வால்பாறை, சோலையாறு உள்ளிட்ட பகுதிகளில், தொடர்ந்து மழை பெய்ததால், சோலையாறு, பரம்பிக்குளம் அணைகள், முழு கொள்ளளவும் நிரம்பியுள்ளன. தொடர் மழையால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, அணைகளில் இருந்து உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது. சோலையாறு அணை 164.16 அடியும், பரம்பிக்குளம் அணையின் 72 அடியில், 71.93, ஆழியாறு அணையின் 120 அடியில், 119.20, திருமூர்த்தி அணையின் 60 அடியில், 53.79, அமராவதி அணையின் 90 அடியில், 60.27 அடி என, அணையின் நீர்மட்டம் உள்ளது. ஆழியாறில் வெள்ள அபாயம்: ஆழியாறு அணையில், 119.20 அடி நீர்மட்டம் உள்ளதால், முழு கொள்ளளவும் நிரம்பும் நிலையில் உள்ளது.
பி.ஏ.பி., அதிகாரிகள் கூறியதாவது: ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளதால், எப்போது வேண்டுமானாலும் நிரம்பி வழியும். அணை நிரம்பும் போது, ஆழியாறு ஆற்றில் தண்ணீர் திறக்க நேரிடும் என்பதால், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் மூலத்தர அணைக்கும், வெள்ள அபாயம் விடுக்கப்பட்டுள்ளது. ஆழியாறு ஆற்று வழியோர கிராமங்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு கொடுக்க, வருவாய்த் துறைக்கு பரிந்துரை செய்துள்ளோம். இவ்வாறு, அவர்கள் கூறினர். மேட்டூர் அணை, ஒரே நாளில் 3 அடி உயர்வு: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில், தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைந்து, கபினி, கே.ஆர்.எஸ்., ஆகிய, இரு அணைகளில் இருந்தும், வினாடிக்கு 52 ஆயிரத்து 751 கன அடி நீர், நேற்று மேட்டூர் அணைக்கு திறக்கப்பட்டது. நேற்று காலை முதல், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து துவங்கி, நேற்று மாலை 4 மணிக்கு, வினாடிக்கு, 50 ஆயிரத்து 656 கன அடியாகவும் அதிகரித்தது. இதனால், நேற்று முன்தினம், 80 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், நேற்று மாலை, 83 அடியாகவும், 42 டி.எம்.சி.,யாக இருந்த நீர் இருப்பு, நேற்று மாலை, 45 டி.எம்.சி.,யாகவும் உயர்ந்தது.
நிருபர் குழு


