Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ஆழ்வார்குறிச்சி, கடையம் பகுதியில் அடிக்கடி மின்தடையால் மக்கள் அவதி

ஆழ்வார்குறிச்சி, கடையம் பகுதியில் அடிக்கடி மின்தடையால் மக்கள் அவதி

ஆழ்வார்குறிச்சி, கடையம் பகுதியில் அடிக்கடி மின்தடையால் மக்கள் அவதி

ஆழ்வார்குறிச்சி, கடையம் பகுதியில் அடிக்கடி மின்தடையால் மக்கள் அவதி

ADDED : அக் 01, 2011 11:26 PM


Google News

ஆழ்வார்குறிச்சி : ஆழ்வார்குறிச்சி, கடையம் பகுதியில் மெல்ல மெல்ல தொடரும் அதிகநேர மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

முந்தைய திமுக அரசின் தோல்விக்கு மிகவும் முக்கிய காரணமாக மின்வெட்டு அமைந்தது. தற்போதைய அரசு ஆட்சிக்கு வரும்முன் மின்வெட்டு படிப்படியாக குறைக்கப்படும் என கூறி ஓட்டு வாங்கி வெற்றி பெற்றது. ஆனால் தற்போது அதிமுக அரசு பதவியேற்று 4 மாதங்களாகியும் மின்வெட்டை சீர் செய்வதற்காக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என எண்ணும் அளவிற்கு தற்போது அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது.



மேலும் தற்போது அக்னி நட்சத்திர வெயிலையும் மிஞ்சும் அளவிற்கு வரலாறு காணாத வெயில் கடந்த பல தினங்களாக காணப்படுகிறது. வீட்டை விட்டு வெளியே தலைகாட்டவே மக்கள் பயப்படும் நிலைமை உருவாகியுள்ளது. இந்த நேரத்தில் வீட்டிற்குள்ளேயும் இருக்க முடியாத நிலைமையை மின்சார வாரியம் செய்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் ஆழ்வார்குறிச்சி பகுதியில் மதியம் 12 மணியிலிருந்து 2 மணி வரை இரண்டு மணிநேரம் மின்வெட்டு இருந்து வந்தது. கடையம் பகுதிகளில் மதியம் 2 மணியிலிருந்து 4 மணி வரை மின்வெட்டு இருந்து வந்தது.



ஆனால் கடந்த இரண்டு தினங்களாக இந்த இரண்டு மணிநேர மின்வெட்டு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து தற்போது 3 மணி நேரமாக மாறிவிட்டது. முன் அறிவிப்பு இல்லாமல் 3 மணி நேர மின்வெட்டு அதிகரித்ததால் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்திற்காக வீட்டிற்குள்ளும் இருக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதுதவிர இரவு நேரங்களில் திடீர் திடீரென மின்வெட்டு ஏற்படுகிறது. எப்போது மின்சாரம் வரும், எப்போது போகும் என்று யாரும் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு மின்வெட்டு படிப்படியாக அமலுக்கு வந்து விட்டது.



அடிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க முடியாத நிலைமை தற்போது தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. பள்ளி விடுமுறை விட்ட பின்னர் குழந்தைகளை வெளியிடங்களுக்கு அழைத்து செல்ல முடியாத அளவு அதிக வெயிலும், வீட்டிற்குள் இருக்க முடியாத அளவு தொடர் மின்வெட்டும் ஏற்பட்டுள்ளது. தற்போது உள்ளாட்சி தேர்தல் அறிவித்துள்ள நிலையில் தொடர் மின்வெட்டால் பாதிக்கப்படும் மக்களின் ஓட்டு அரசுக்கு எதிராக திரும்பும் என்பதில் ஐயமில்லை.



பழைய ஆட்சிக்கு வந்துவிட்டோமோ என்று எண்ணும் அளவிற்கு மின்வெட்டு அமலில் இருப்பதால் வியாபாரிகள், பொதுமக்கள் அனைவரும் கஷ்டப்படுகின்றனர். கடைகளில் எப்போது மின்வெட்டு வரும் என தெரியாததால் உணவு பொருட்கள் விலைக்கு கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக 3 மணிநேர மின்வெட்டை மாற்றி அமைத்து குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் மின்வெட்டை முன்னறிவிப்புடன் நிறுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடரும் இந்த மின்வெட்டு வரும் உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சியினருக்கு 'ஷாக்' அடிக்குமா? என்பது விரைவில் தெரிந்துவிடும்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us