PUBLISHED ON : அக் 05, 2011 12:00 AM

அம்பாசிடர் காருக்கு டாட்டா!
மகாராஷ்டிர மாநில அமைச்சர்கள் அனைவரும், மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர். விஷயம் வேறு ஒன்றும் இல்லை... இதுவரை, அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட அம்பாசிடர் கார்களில் வலம் வந்த அமைச்சர்கள், இனிமேல், விலை உயர்ந்த சொகுசு கார்களில் பவனி வரப் போகின்றனர். அந்த மகிழ்ச்சியின் வெளிப்பாடு, அவர்களின் முகங்களில் அப்பட்டமாகத் தெரிகிறது. 'எப்படி இந்த திடீர் மாற்றம் நிகழ்ந்தது' என, அமைச்சர் ஒருவரின் வாயை கிளறியபோது, இதன் பின்னணியில், ஒரு கார் விபத்து இருப்பது தெரிய வந்தது. சட்டசபை விவகாரங்களுக்கான அமைச்சர் ஹர்ஷவர்த்தன் பாட்டீல், சமீபத்தில், சொகுசு காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது, திடீரென விபத்தில் சிக்கினார். விலை உயர்ந்த கார் என்பதால், விபத்து நிகழும்போது, காரில், தானாகவே விரிந்து கொள்ளும், 'ஏர்பேக்' வசதி அதில் உள்ளது. எனவே, விபத்து நடந்தபோது, இந்த, 'ஏர்பேக்' புண்ணியத்தால், பெரிய அளவில் அடி ஏதும் படாமல், ஹர்ஷவர்த்தன் உயிர் தப்பினார். தனக்கு விபத்து ஏற்பட்ட சம்பவத்தை, முதல்வர் பிரித்விராஜ் சவானிடம் அவர் கூறியதும், அனைத்து அமைச்சர்களுக்கும், அம்பாசிடர் காருக்கு பதிலாக, விலை உயர்ந்த, 'ஏர் பேக்' வசதியுள்ள, சொகுசு கார்களை, அரசு சார்பில் உடனடியாக ஒதுக்குவதற்கு உத்தரவிட்டார். அவசரம், அவசரமாக அமைச்சரவை கூட்டத்தை கூட்டி, இந்த புதிய திட்டத்துக்கு ஒப்புதலும் பெற்று விட்டார். சக அமைச்சர்கள் இதுபற்றி கூறுகையில், 'எங்கள் மீது, முதல்வருக்குத்தான் எத்தனை பாசம்! உண்மையிலேயே, இவர் தான் தலைவர்' என, ஆனந்த கண்ணீர் வடிக்கின்றனர்.


