ADDED : அக் 07, 2011 01:41 AM
சேலம்: சேலம் மாநகர போக்குவரத்து பிரிவுக்கு, இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில், இரண்டு ஆர்.ஐ.,க்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சேலத்தில், மாஜி அமைச்சருக்கு போலீஸார் வழங்கிய ராஜ மரியாதை, பெண் வேடம்
அணிந்து நடு ரோட்டிலேயே முதல்வரை ஆபாசமாக சித்தரித்து நடத்தப்பட்ட நாடகம்
ஆகியவற்றால், சேலத்தில் இருந்து, 15 இன்ஸ்பெக்டர்கள், ராமநாதபுரம்,
திருநெல்வேலிக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.இந்த அதிரடி மாற்றத்தின்போது,
சேலம் மாநகர வடக்கு போக்குவரத்து பிரிவு ஆர்.ஐ., இளங்கோவன்
தஞ்சாவூருக்கும், தெற்கு போக்குவரத்து பிரிவு ஆர்.ஐ., சுப்பிரமணியன்,
வேலூருக்கும் மாற்றம் செய்யப்பட்டனர்.இந்த மாற்றத்தையடுத்து, கடந்த இரண்டு
மாதங்களாக சேலம் மாநகர போலீஸின் போக்குவரத்து பிரிவு ஆர்.ஐ.,பணியிடம்
காலியாகவே இருந்தது. இதனால், மாநகரில் போக்குவரத்தை சரிசெய்வதில் மிகுந்த
சிரமம் ஏற்பட்டு வந்தது.இந்நிலையில், தூத்துக்குடி மாநகர போக்குவரத்து
பிரிவு ஆர்.ஐ., சொரிமுத்து, தஞ்சாவூர் போக்குவரத்து பிரிவு ஆர்.ஐ.,
கிருஷ்ணராஜா ஆகியோர், சேலம் மாநகர போக்குவரத்து பிரிவுக்கு மாற்றம்
செய்யப்பட்டனர். இவர்கள், நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.
இவர்களுக்கு, போக்குவரத்து பிரிவு எஸ்.ஐ.,க்கள், போலீஸார் வாழ்த்து தெரிவித்தனர்.


