Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/தேயிலை சரக்கேற்றும் லாரிகள் தொடர் ஸ்டிரைக் அறிவிப்பு

தேயிலை சரக்கேற்றும் லாரிகள் தொடர் ஸ்டிரைக் அறிவிப்பு

தேயிலை சரக்கேற்றும் லாரிகள் தொடர் ஸ்டிரைக் அறிவிப்பு

தேயிலை சரக்கேற்றும் லாரிகள் தொடர் ஸ்டிரைக் அறிவிப்பு

ADDED : ஆக 25, 2011 01:52 AM


Google News
குன்னூர் : குன்னூரில் தேயிலை சரக்கேற்றி செல்லும் லாரி உரிமையாளர்கள் தொடர் ஸ்டிரைக் நடத்த முடிவெடுத்துள்ளதால், நீலகிரி தேயிலை வர்த்தகம் முற்றிலும் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தென் மாநில அளவில் லாரி உரிமையாளர்கள் நடத்தி வரும் ஸ்டிரைக்கிற்கு குன்னூர் லாரி உரிமையாளர்கள் ஆதரவு கொடுத்து வந்த நிலையில், குன்னூரில் இருந்து வெளி மாவட்டம், பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய சுமார் 25 லட்சம் கிலோ தேயிலை தூள் குன்னூரில் உள்ள பல்வேறு குடோன்களில் தேங்கின. இதற்கிடையில், குன்னூரில் இருந்து தேயிலை தூள் சரக்கேற்றி செல்லும் லாரி உரிமையாளர்கள், 'டீசல், டயர் விலையேற்றம், இன்சூரன்ஸ் கட்டண உயர்வு உட்பட காரணங்களால் தற்போதுள்ள வாடகையில் 20 சதவீதம் உயர்த்தி கொடுக்க வேண்டும்,' என, குன்னூர் ரோடு டிரான்ஸ்போர்ட் உரிமையாளர்களிடம் கோரிக்கை வைத்தனர். குன்னூர் ரோடு டிரான்ஸ்போர்ட் உரிமையாளர்கள் சங்க தலைவர் பிலிப் மேத்யூ, செயலர் சேகர், லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் முகமது, செயலர் கிருஷ்ணகுமார் உட்பட நிர்வாகிகள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடந்தது. டிரான்ஸ்போர்ட் உரிமையாளர்கள் 9 சதவீத வாடகை உயர்வு அளிக்க ஒப்புக் கொண்டனர். இதை லாரி உரிமையாளர்கள் ஏற்காத நிலையில், 'குன்னூரில் இருந்து தேயிலை தூள் சரக்கேற்றி செல்லும் பணியை நிறுத்துவது,' என முடிவெடுத்துள்ளனர்; ஏற்கனவே, சுமார் 25 கோடி மதிப்புள்ள தேயிலை தூள் குன்னூரில் உள்ள குடோன்களில் தேங்கியுள்ள நிலையில், குன்னூர் லாரி உரிமையாளர்களின் ஸ்டிரைக் அறிவிப்பால், தேயிலை வர்த்தகம் முற்றிலும் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us