இயற்கை வளங்களை காக்க புதிய நடவடிக்கை
இயற்கை வளங்களை காக்க புதிய நடவடிக்கை
இயற்கை வளங்களை காக்க புதிய நடவடிக்கை
ADDED : ஆக 30, 2011 12:29 AM
சென்னை : ''பல்லுயிர் பெருக்கம் குறித்த மாநாடு, வரும் 2012ல்
நடத்தப்படும்,'' என்று, தேசிய பல்லுயிர் பெருக்க ஆணையத்தின் தலைவர்
பாலகிருஷ்ண பிசுபதி தெரிவித்தார். தேசிய அளவிலான சுற்றுப்புறச் சூழ்நிலை
பாதுகாப்பு மற்றும் மேலாண்மை குறித்த கலந்தாய்வு கூட்டம், லயோலா
கல்லூரியில் நடந்தது. இதில், கால்நடை மருத்துவம் சார்ந்த மற்றும் விலங்கின
அறிவியல் பல்கலை துணைவேந்தர் பிரபாகரன், கலந்தாய்வுக் கூட்டத்தை துவக்கி
வைத்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, தேசிய பல்லுயிர் பெருக்க
ஆணையத்தின் தலைவர் பாலகிருஷ்ண பிசுபதி பங்கேற்று பேசியதாவது: இயற்கை
வளங்களையும், பல வித உயிரினங்களையும் அழிவிலிருந்து பாதுகாக்க, உலக நாடுகள்
பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதில் பல்லுயிர்
பெருக்கத்திற்கான சட்ட விதிகள், இந்தியா உட்பட சில நாடுகளில் மட்டுமே
நடைமுறையில் உள்ளன. அதில், இந்தியாவில் பல்லுயிர் பெருக்க விதிமுறைகள்,
அனைத்து மாநிலங்களிலும் செயல்பாட்டில் இருக்கின்றன. இயற்கை வளங்களை
பாதுகாப்பது மற்றும் பல்லுயிர் பெருக்கம் குறித்த விழிப்புணர்வு, பொது
மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். இது குறித்து அறிவியலாளர்கள், பொது
மக்களிடையே எவ்வாறு எடுத்துச் செல்வது பற்றிய ஆராய்ச்சியை செய்ய உள்ளனர்.
இந்தியாவில் வரும் 2012ல் பல்லுயிர் பெருக்க குறித்த மாநாடு
நடத்தப்படுகிறது. அதற்கு முன்னர் இயற்கை வளத்தை அழிவிலிருந்து பாதுகாக்க
நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு பாலகிருஷ்ண பிசுபதி பேசினார். இந்நிகழ்ச்சியில், லயோலா கல்லூரி தலைவர் அமல் குழந்தைசாமி,
செயலர் ஜோ அருண், முதல்வர் ஜெயராஜ் மற்றும் மாணவ, மாணவியர் பலர் பங்கேற்றனர்.


