Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/நிலம் எடுக்க எதிர்ப்பால் மெட்ரோ ரயில் நிலையம் அமைவதில் சிக்கல்

நிலம் எடுக்க எதிர்ப்பால் மெட்ரோ ரயில் நிலையம் அமைவதில் சிக்கல்

நிலம் எடுக்க எதிர்ப்பால் மெட்ரோ ரயில் நிலையம் அமைவதில் சிக்கல்

நிலம் எடுக்க எதிர்ப்பால் மெட்ரோ ரயில் நிலையம் அமைவதில் சிக்கல்

ADDED : செப் 24, 2011 11:20 PM


Google News
Latest Tamil News

நிலம் கையகப்படுத்துவதற்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்பு காரணமாக, பச்சையப்பன் கல்லூரியில் மெட்ரோ ரயில் நிலையம் அமைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள இங்கு, ரயில் நிலையம் அமையாவிட்டால், எதிர்காலத்தில் இப்பகுதி மக்கள் அவதிப்படும் சூழல் அபாயம் உள்ளது.பச்சையப்பன் கல்லூரியில் மெட்ரோ ரயில் நிலையம் அமைத்தால், அதன் தொன்மை சீரழிந்து விடும் என்றும், பழமை வாய்ந்த மரங்கள் அழிந்து விடும், என்று கூறி எதிர்ப்பு கிளம்பியுள்ளது.



இதனால், இங்கு ரயில் நிலையம் அமைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் திட்டத்தை வரும் 2015ம் ஆண்டிற்குள் முடிக்கும் வகையில் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. பச்சையப்பன் கல்லூரியில் அமையவுள்ள ஒரு ரயில் நிலையத்திற்காக காத்திருந்தால், ஒட்டு மொத்த திட்டமே தாமதமாகும் நிலை உள்ளது.

எதிர்ப்பு காரணமாக, இங்கு ரயில் நிலையம் அமைப்பதை கைவிடும் சூழ்நிலை, மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு ஏற்பட்டுள்ளது.



பொதுமக்களுக்கு பாதிப்பு:ரயில் நிலையம் அமையாவிட்டால், நியூ ஆவடி ரோடு, அமைந்தகரை, ஹாரிங்டன் சாலை, சூளை மேடு, லயோலா கல்லூரி உட்பட, இதைச் சுற்றி ஒன்றரை கி.மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், இங்கு ரயில் நிலையமின்றி மெட்ரோ ரயிலை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும்.



51 சென்ட் நிலம் தேவை:இப்பிரச்னை குறித்து பேசிய பச்சையப்பன் கல்லூரி அறக்கட்டளையின் முன்னாள் தலைவர் ஐசரி கணேஷ், ''மெட்ரோ ரயில் நிலையத்திற்காக, 51 சென்ட் நிலம் தேவை என நிர்வாகம் கேட்டது. கல்லூரி நுழைவாயிலில் உள்ள,'ஆர்ச்' அகற்றப்பட்டு, பணி முடிந்ததும் மீண்டும் அமைத்து தரப்படும். மரங்கள் அகற்றப்பட்டால், அதற்கு பதிலாக, மரக்கன்றுகள் நட்டு, பராமரித்து தருவதாகவும், வேறு சேதாரங்கள் ஏற்பட்டாலும் அவற்றை சீர்படுத்தி தருகிறோம் என, மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவாதம் அளித்தது.



இதையேற்றும், மக்கள் நலன் கருதியும், ரயில் நிலையம் அமைக்க இடம் ஒதுக்கினோம். ஆனால், இதற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது, நான் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து விட்டேன்'' என்றார்.



மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவாதம்:மெட்ரோ ரயில் நிர்வாக, தலைமை பொதுமேலாளர் (மக்கள் தொடர்பு) கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:மெட்ரோ ரயில் பாதை, சென்ட்ரலில் இருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலை, நேரு பூங்கா, கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி சென்று, அங்கிருந்து வலது புறமாக திரும்பி, செனாய் நகர், திரு.வி.க., பூங்கா வழியாக செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. பச்சையப்பன் கல்லூரி அருகே, ரயில் பாதை வளைந்து செல்வதால், இங்கு ரயில் நிலையம் அமைக்க வேண்டியுள்ளது.

இதற்காக, 51 சென்ட் நிலம் மட்டுமே தேவை. கட்டுமானப் பணிக்காக, இரண்டு ஏக்கர் வரை தற்காலிகமாக தேவைப்படும். பணி முடிந்ததும், இந்த நிலத்தை திருப்பித் தந்து விடுவோம்.

கல்லூரி முன்பாக ஏராளமான காலியிடம் இருப்பதால், கட்டடங்கள் இடிக்கப்படமாட்டாது. மரங்கள் மட்டும் அகற்றப்படும். மரங்களை வெட்டாமல் வேறு இடத்திற்கு மாற்றவும் முயற்சிக்கப்படும்.



வெட்டப்படும் மரங்கள், 50 என்றால், அதற்கு பதிலாக, 500 மரக்கன்றுகள் கூட நட்டு, பராமரித்துத் தர தயாராக இருக்கிறோம். வேறு எந்த வகையிலாவது பாதிப்பு ஏற்பட்டாலும் அதற்கு ஈடு செய்து தரப்படும் என உத்தரவாதம் அளித்துள்ளோம்.

இவ்வாறு கிருஷ்ணமூர்த்தி கூறினார்.- என்.சரவணன் -







      Our Apps Available On




      Dinamalar

      Follow us