ADDED : அக் 06, 2011 03:28 AM
தஞ்சாவூர்: ஆயுதபூஜையை முன்னிட்டு தஞ்சை நகரமே களை கட்டியது.
கலைமகளை வழிபட்டால் நலமே வந்து சேரும் என்ற நம்பிக்கையில் சரஸ்வதி பூஜை,
ஆயுத பூஜை, விஜயதசமி போன்றவை கொண்டாடப்படுகிறது. சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத
பூஜையன்று மாணவ, மாணவிகள் தங்கள் புத்தகங்களையும், தொழிலாளர்கள் தங்களது
தொழில் கருவிகளையும் வைத்து வணங்குவது வழக்கம். அவ்வகையில் நேற்று
கொண்டாடப்பட்ட ஆயுத பூஜையின்போது தஞ்சை நகரமே களை கட்டி காணப்பட்டது.
தொழிற்சாலைகள், பஸ், லாரி நிறுவனங்களில் பெரிய அளவில் கொடி, தோரணம், மைக்
செட்டுகள் கட்டப்பட்டது. பிரமாண்ட பூஜைகள் நடத்தப்பட்டு தொழிலாளர்களுக்கு
பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
ஆட்டோ ஸ்டாண்டுகள் மற்றும் டாக்ஸி ஸ்டாண்டுகளில் எல்லா வாகனங்களும் நீண்ட
வரிசையில் நிறுத்தப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டன. பிறகு வெள்ளோட்டமும்
நடத்தப்பட்டது. அதே போலவே ஒவ்வொரு தொழில் நிறுவனங்கள், கடைகள், வர்த்தக
நிறுவனங்களிலும் கொடி, தோரண அலங்காரங்கள், மாலை அலங்காரங்கள் செய்யப்பட்டு
கலைமகளுக்கு வழிபாடுகள் நடத்தப்பட்டது. எங்கு திரும்பினாலும் மைக் செட்
சத்தமாகவும், சுத்தம் செய்யப்பட்டு மாலை, மரியாதையோடு சென்ற வாகனங்களாலும்
நகரம் களை கட்டியிருந்ததை உணர முடிந்தது.


