விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க அரசு நடவடிக்கை
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க அரசு நடவடிக்கை
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க அரசு நடவடிக்கை
ADDED : ஜூலை 27, 2011 03:41 AM
மதுரை:தமிழகத்தில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க அரசு புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.தமிழகத்தில் பாரம்பரியமாக விவசாயம் மேற்கொண்டு வரும் விவசாயிகள், தங்கள் வயலில் தேவைக்கு அதிகமாக உரம், பூச்சிமருந்து போன்ற இடுபொருட்களை பயன்படுத்துகின்றனர். இதனால் அதிக பணம் வீணாவதுடன், மகசூலும் அதிகரிப்பதில்லை. எனவே நிலத்தின் மண்ணின் தன்மைக்கேற்ப இடுபொருளை வழங்க விவசாயிகள் பட்டியல் தயார் செய்து வருகின்றனர்.
இதன்படி, ஒவ்வொரு விவசாயியும் தனது நிலத்தின் மண்மாதிரியை அந்தந்த பகுதி விவசாய விரிவாக்க அலுவலகத்தில் வழங்க வேண்டும். அதை ஆய்வு செய்யும் அதிகாரிகள் அவ்விவசாயிக்கு மண்வள அட்டை வழங்குவர். அத்துடன் ஒரு படிவத்தையும் வழங்குவர்.
அதில் விவசாயியின் பெயர், முகவரி, அவரிடம் உள்ள நன்செய், புன்செய் நிலங்கள் விபரம், மண்ணின் தன்மை, வருமானம், விவசாயம் சார்ந்த வருமானம், சாகுபடி செய்துள்ள பயிர்களின் விபரம், பண்ணை இயந்திரங்கள் உள்ளனவா? போன்ற விபரங்கள் கேட்கப்பட்டு இருக்கும். அத்துடன் அவரது வருவாயை இரட்டிப்பாக்கும் வகையில், அவரது மண்ணின் தன்மை, அதற்கேற்ப எந்தெந்த பயிர்களை சாகுபடி செய்யலாம், அதற்கு எப்படி உரமிடுவது, மண்ணில் உள்ள நுண்ணூட்ட, பேரூட்டச் சத்துக்கள் விபரம், மண் அமிலத்தன்மை, காரத்தன்மை பெற்றதா என்பது உட்பட விவசாயியின் அனைத்து ஜாதகமும் பதிவு செய்யப்படும். அதனடிப்படையில் மாவட்ட, வட்டார, கிராம, விவசாயிக்கென தனிக் கோடு எண் வழங்கப்படும். அவை அனைத்தும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும்.இதனடிப்படையிலேயே அவருக்கு உரங்கள், இடுபொருட்கள் மட்டுமின்றி, மானியமும், ஆலோசனையும் வழங்கப்படும். தேவைக்கேற்ப இடுபொருளை பயன்படுத்துவதன் மூலம் விவசாயிகளுக்கு பணம் வீணாவது தவிர்க்கப்படும். வருவாயும் அதிகரிக்கும். அரசின் விவசாய உதவித் திட்டங்கள் பெற இப்பதிவு அவசியம். எனவே விவசாயிகளின் பட்டியலை அரசு சேகரிக்க துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இதன்படி வட்டார உதவிஇயக்குனர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் பதிவு செய்யாத விவசாயிகளுக்கு அரசு தொடர்பான விபரங்கள் கிடைப்பதில்லை என்பதால் இப்பதிவு கட்டாயமாக்கப்படுகிறது. மதுரை கிழக்கு யூனியன் விவசாய உதவி அதிகாரி எஸ்.கனகராஜ் கூறுகையில், ''விவசாயிகள் தங்களை பதிவு செய்வது அவசியம். இதற்காக முதலில் மண்மாதிரியுடன் வரும் விவசாயிகள் ரூ. 20 செலுத்தி மண்வள அட்டை பெற வேண்டும். அத்துடன் அவர்களிடம் வழங்கப்படும் படிவத்தில் அவர்களை பற்றிய விபரங்களை பதிவு செய்ய வேண்டும்,'' என்றார்.ஜி.பி.எஸ்., கருவி: விவசாயிகளின் விபரங்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படுவதைத் தொடர்ந்து, வருங்காலத்தில் பெரும் மாற்றம் ஏற்பட உள்ளது. விவசாய உதவி அதிகாரிகளுக்கு ஜி.பி.எஸ்., கருவி (குளோபல் பொசிஸனிங் சிஸ்டம்) வழங்கப்பட உள்ளது. இது பெர்சனல் டிஜிட்டல் அசிஸ்டென்ட் கருவியுடன் இணைக்கப்படும். ஒரு விவசாயிக்கு உரம், இடுபொருள் கிடைக்கவில்லை என்றால் அவரது விபரம் இக்கருவில் பதிவு செய்யப்படும். அதனடிப்படையில் அதை சம்பந்தப்பட்ட ஏரியாவில் உள்ள சொசைட்டிகளுக்கு அனுப்பி பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படும் அளவு விவசாயத் துறை நவீனப்படுத்தப்பட உள்ளது.