/உள்ளூர் செய்திகள்/சேலம்/வருவாய் சான்றிதழ் வழங்காததால் தாலுகா ஆஃபீஸில் மாணவி தர்ணாவருவாய் சான்றிதழ் வழங்காததால் தாலுகா ஆஃபீஸில் மாணவி தர்ணா
வருவாய் சான்றிதழ் வழங்காததால் தாலுகா ஆஃபீஸில் மாணவி தர்ணா
வருவாய் சான்றிதழ் வழங்காததால் தாலுகா ஆஃபீஸில் மாணவி தர்ணா
வருவாய் சான்றிதழ் வழங்காததால் தாலுகா ஆஃபீஸில் மாணவி தர்ணா
ADDED : ஜூலை 13, 2011 03:28 AM
மேட்டூர்: மாலை வரை காத்திருந்தும் வருமான சான்றிதழ் கிடைக்காததால், சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் நேற்று இரவு மேட்டூர் தாலுகா அலுவலக வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகா, மல்லிகுந்தம் பகுதியை சேர்ந்தவர் வக்கீல் முத்துசாமி.
இவரது மகள் முல்லை, கோவை அரசு சட்டகல்லூரியில், பி.எல்., இரண்டாம் ஆண்டு படிக்கிறார். அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்காக, வருமான சான்றிதழ் கேட்டு, மேட்டூர் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பம் கொடுத்துள்ளார். நேற்று மாலை வரை சான்றிதழ் கிடைக்காததால், தாலுகா அலுவலக வாசலில் அமர்ந்து, முல்லை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.மண்டல தாசில்தார் மதியழகன் கூறுகையில்,''வருமான சான்றிதழ் பெற மதியம் 2 மணிக்குள் விண்ணப்பம் தர வேண்டும். வக்கீல் முத்துசாமி, மாலை 4 மணிக்கு மேல்தான் மனு கொண்டு வந்தார். அதில், ஆண்டு வருமானம், 24 ஆயிரம் ரூபாய் என குறிப்பிட்டிருந்தார். வருமானம் தொடர்பாக விசாரிக்க வேண்டிய இருந்ததால், தாசில்தாரை பார்த்து வரும்படி கூறி விட்டு, கள ஆய்வுக்காக நங்கவள்ளி சென்று விட்டேன்,'' என்றார்.தாசில்தார் ஜெயகுமார் கூறியதாவது:வருமான சான்றிதழ் மண்டல தாசில்தார்தான் கொடுக்க வேண்டும். அவர், கள ஆய்வுக்கு சென்று விட்டார். எனவே, நாளை காலை சான்றிதழ் வாங்கி கொள்ளுங்கள், என கூறினோம். அதற்கு மறுப்பு தெரிவித்து, தாலுகா அலுவலக வாசலில் மாணவி அமர்ந்துள்ளார், என்றார்.நேற்று இரவு வரை மாணவி முல்லை, தந்தை முத்துசாமி, தாய் கல்யாணி ஆகியோர் தாலுகா அலுவலகத்தில் அமர்ந்திருந்தனர். அதனால், தாலுகா அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.


