ADDED : ஜூலை 14, 2011 12:29 AM
புதுச்சேரி : குடும்ப பிரச்னை காரணமாக சென்னையைச் சேர்ந்த அரசு டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.சென்னையிலுள்ள கபிலர் நகரில் வசித்தவர் கவுதமன், 48.
இவர் மாநகர போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். இவரது மனைவி அலமேலு. கடந்த சில நாட்களுக்கு முன் கணவனின் நடத்தை சரியில்லையென்பதால், அவரது மனைவி கோபித்துக்கொண்டு தாய்வீடான மன்னார்குடிக்கு சென்றுவிட்டார்.இந்நிலையில் கவுதமன் நேற்று முன்தினம் புதுச்சேரி பஸ் நிலையம் அருகிலுள்ள லாட்ஜில் ரூம் எடுத்து தங்கியுள்ளார். தன்னுடைய தங்கை லதாவிடம் குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும், தங்கியுள்ள இடம் பற்றிய தகவலையும் மொபைல்போன் மூலம் தெரிவித்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த அவரது தங்கை விழுப்புரத்திலுள்ள உறவினர் பிரபுவிடம் தகவல் தெரிவித்துள்ளர். இதை தொடர்ந்து பிரபு, புதுச்சேரியிலுள்ள லாட்ஜிக்கு விரைந்து சென்று பார்த்த போது, கவுதமன் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்துள்ளார். உடனே அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு கவுதமன் இறந்துவிட்டார்.உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


