ADDED : ஆக 11, 2011 12:23 AM
புதுடில்லி: 'ஆதார்' அடையாள அட்டை, கடந்த ஜூலை 31ம் தேதி வரை ஒரு கோடியே 90 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது என, மத்திய திட்ட அமலாக்கத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் தெரிவித்தார்.
லோக்சபாவில் கேள்வி நேரத்தின்போது அவர் கூறுகையில், ''இந்தியாவில் உள்ள மக்கள் அனைவருக்கும், அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த அடையாள அட்டை (ஆதார்) வழங்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒருங்கிணைந்த அடையாள ஆணையம் துவக்கப்பட்டது. ஒருங்கிணைந்த அடையாள அட்டை வழங்கும் பணி துவக்கப்பட்டு கடந்த ஜூலை 31ம் தேதியுடன் ஒரு கோடியே 90 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. வரும் 2014ம் ஆண்டுக்குள் 60 கோடி பேருக்கு அடையாள அட்டை வழங்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,'' என்றார்.


