Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/பள்ளிகளில் "கிரேடு' முறை: கல்வியாளர்கள் கூறுவது என்ன?

பள்ளிகளில் "கிரேடு' முறை: கல்வியாளர்கள் கூறுவது என்ன?

பள்ளிகளில் "கிரேடு' முறை: கல்வியாளர்கள் கூறுவது என்ன?

பள்ளிகளில் "கிரேடு' முறை: கல்வியாளர்கள் கூறுவது என்ன?

UPDATED : அக் 07, 2011 02:12 AMADDED : அக் 05, 2011 11:42 PM


Google News
Latest Tamil News
தமிழக பள்ளிகளில் அறிமுகம் செய்யப்படவுள்ள 'கிரேடிங்' முறைக்கு ஆசிரியர்களும் பெற்றோர்களும் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ள அதே வேளையில், இம்முறையின்படி மாணவர்களை மதிப்பிட ஆசிரியர்களுக்கு முறையாக பயிற்சி அளிக்க வேண்டும் என்று சிலரும், தொழிற்படிப்புகளை தேர்வு செய்ய அடிப்படையாக உள்ள பிளஸ் 2 படிப்புக்கு, 'கிரேடு' முறை மதிப்பெண்கள் எந்த வகையில் பொருத்தமாக இருக்கும் என்பதை அரசு தெளிவுப்படுத்த வேண்டும் என்று வேறு சிலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழக பள்ளிகளில் ஆண்டாண்டு காலமாக பின்பற்றப்பட்டு வந்த கல்வி முறைகள் மாற்றப்பட்டு, இந்தாண்டு முதல் சமச்சீர் கல்வி முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சமச்சீர் கல்விக்கான புத்தகங்கள் அனைத்தும் என்.சி.ஆர்.டி.இ.,பாடத் திட்டத்தை தழுவியதாகவே உள்ளதால், மாணவர்களின் படைப்பாற்றல் திறன் மேம்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது.சமச்சீர் கல்வி முறை அமலுக்கு வந்து விட்டாலும், ஒரே மாநிலத்துக்குள் செயல்பட்டு வரும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளிலும், அரசு மற்றும் மெட்ரிக் பள்ளிகளிலும் பின்பற்றப்பட்டு வரும் மதிப்பீட்டு முறைகள் வெவ்வேறாகவே உள்ளன. இப்பிரச்னைக்கு தீர்வு காண, அனைத்து பள்ளிகளிலும்'கிரேடிங்' முறையை அமல்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது தமிழக அரசு.



இது குறித்து கல்வியாளர்கள் பெற்றோர் தெரிவித்த கருத்துக்கள்:



விசாலாட்சி, மெட்ரிக் பள்ளி தாளாளர்கள் கூட்டமைப்பின் தலைவர்:

தமிழக அரசு கொண்டு வரும் புதிய மதிப்பீட்டு முறையை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். மதிப்பெண்ணின் பின்னால் ஓடும் தற்போதைய ஆரோக்கியமற்ற கல்வி முறைக்கு கிரேடிங் முறை சமாதி கட்டும். ஏனென்றால் தற்போதைய மதிப்பீட்டு முறையில் 100 மதிப்பெண் எடுத்த மாணவனுக்கு எளிதாக மேற்படிப்பில் இடம் கிடைத்து விடுகிறது. அவனை விட ஒரு மதிப்பெண் குறைந்த மாணவனுக்கு கிடைப்பதில்லை. இருவரும் சமமான புத்திசாலிகளாக இருக்கும் பட்சத்தில் இந்த சிறு வேறுபாடு பெரிய விளைவுகளை ஏற்படுத்துகிறது. இன்று விடைத்தாள் மூலம் மாணவனின் பாட அறிவை மட்டுமே ஆசிரியர்களால் கிரகிக்க முடிகிறது. கிரேடிங் முறை மூலம் மாணவனின் தலைமை பண்பு, பேச்சாற்றல், தன்னம்பிக்கை உள்ளிட்ட 'சாப்ட் ஸ்கில்ஸ்' திறன்களையும் கண்டறிந்து வளர்க்க முடியும். குறிப்பிட்ட கேள்விகளுக்கான விடைகளை 100 சதவீதம் மனப்பாடம் செய்தால் பாஸ் ஆகி விடலாம் என்ற இப்போதைய நிலை மாறி, பாடங்களை புரிந்திருந்தால் மட்டுமே பாஸ் ஆக முடியும் என்ற ஆரோக்கியமான நிலை உருவாகும். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் தேர்வுகள், பொது நுழைவுத் தேர்வுகள், வேலைக்கான போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறவும் புதிய மதிப்பீட்டு முறை உதவும்.கிரேடிங் முறை மூலம் மாணவர்களை ஆசிரியர்களால் எளிதில் தரம் பிரிக்கவும் மதிப்பிடவும் முடியும். மாணவர்களின் திறமைகளை ஆசிரியர்களால் புரிந்து கொள்ள முடியும். மாணவர்களுக்கு தேர்வு கால நெருக்கடியும் மன அழுத்தமும் இருக்காது. ஆனால் எப்படி மதிப்பீடு செய்வது, எதன் அடிப்படையில் மதிப்பீடு செய்வது என்பது குறித்து அனைத்துப் பள்ளி ஆசிரியர்களுக்கும் முறையான பயிற்சி அளிக்க வேண்டும்.



ஆன்டனி, முதல்வர் சுகுணா ரிப் மெட்ரிக் பள்ளி:

மிகவும் நல்ல முயற்சி. அதிக மதிப்பெண் வாங்க வேண்டும் என்ற மன உளைச்சல் மாணவர்களுக்கு இருக்காது. மனப்பாடம் செய்யாமல் புரிந்து படிப்பது கட்டாயம் ஆகி விடுவதால் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். மாணவர்களின் ஒட்டு மொத்த ஆளுமைத் திறன் மேம்படும் என்பதால் அனைத்து பள்ளிகளும் புதிய மதிப்பீட்டு முறையை வரவேற்கலாம். சமச்சீர் கல்வியை தவிர்க்க, சி.பி.எஸ்.இ., முறைக்கு மாறியவர்களுக்கு புதிய இந்த மாற்றம் ஏமாற்றம் தரும். மெட்ரிக் அல்லது அரசுப் பள்ளியிலேயே தொடர்ந்து படித்திருக்கலாமே என இப்போதே பேசத் துவங்கி விட்டனர்.



நந்தினி, முதல்வர் வித்ய விகாஸ் மெட்ரிக் பள்ளி:

இன்று மெட்ரிக் பாடத்திட்டங்களின் கீழ் படித்த மாணவர்களே அதிகளவில் சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் வெற்றி பெறுகின்றனர்; வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர். குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர். சி.பி.எஸ்.இ., கல்வி முறையின்படி மதிப்பீட்டை மாற்றி அமைத்தால் கற்பித்தலிலும் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். ஆசிரியர்களிடமும் அர்ப்பணிப்பு மனப்பான்மை வேண்டும். சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் மதிப்பீட்டு முறை சரியாக இல்லை என்ற காரணத்தால் சில மாணவர்கள் மெட்ரிக் பள்ளிகளுக்கு மாறினர். இப்போது மெட்ரிக் பள்ளிகளிலும் அதே மதிப்பீட்டு முறை வந்து விட்டால் ஐ.சி.எஸ்.இ.,போன்ற பிற கல்வி முறைகளுக்கு மாறும் சூழல் ஏற்படும். சி.பி.எஸ்.இ., கல்வி முறையின்படி மதிப்பீட்டு முறையை பின்பற்றினால் ஓ.கே., ஆனால் பெயரளவுக்கு மட்டும் மதிப்பீட்டு முறையை பின்பற்றுவது மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும். மாணவர்களின் 'ஐ.கியூ.,' குறையும். இதை தவிர்க்க, மதிப்பீட்டு முறை குறித்து தெளிவான பயிற்சி அளிக்க வேண்டியது முக்கியம். பாடப் புத்தகங்களும் என்.சி.ஆர்.டி.இ., படி இருக்க வேண்டும். மற்றபடி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இது எளிதான திட்டம்.



சத்தியசீலன், ஆசிரியர்:

குறிப்பிட்ட மதிப்பெண் அளவுக்குள் மதிப்பெண் பெறும் மாணவர்களை ஒரே 'கிரேடின்' கீழ் கொண்டு வருவது நல்லதுதான். இதன் மூலம் மாணவர்களுக்குள் ஏற்றத்தாழ்வு குறையும். மோசமாக படிக்கும் மாணவனுக்கு கூட தானும் நன்கு படிக்கும் மாணவர்களின் பட்டியலில் இருப்பதாக ஒரு பாசிட்டிவ் மனப்பான்மை வரும். இது சிறு வகுப்புகளுக்கு ஓ.கே., உயர்கல்வி படிப்புகள், கல்லூரிகளை தேர்வு செய்ய உதவும் பிளஸ் 2 வகுப்புக்கும் இதே கிரேடிங் முறையை பின்பற்றுவது குறித்து அரசு தெளிவுப்படுத்த வேண்டும். ஏனென்றால் இன்று கவுன்சிலிங்கில் .1 அல்லது .2 மதிப்பெண் வித்தியாசத்தில் கூட நல்ல படிப்பு அல்லது கல்லூரி கிடைக்காமல் போய் விடுகிறது. மற்றபடி மாணவர்களின் ஒட்டு மொத்த ஆளுமைத் திறன்கள் வெளிப்பட கிரேடிங் முறை உதவும் என்பதால் வரவேற்கிறோம்.



பழனிச்சாமி, தலைமை ஆசிரியர், வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி:

தமிழக அரசின் இந்த திட்டத்தை வரவேற்கிறேன். சிறு மதிப்பெண் வித்தியாசங்களால் மாணவர்கள் தற்கொலை செய்வது குறையும். தாழ்வு மனப்பான்மை அகலும்.



வீராசாமி, பெற்றோர்: சமச்சீர் கல்வி முறை வருகிறது என்றவுடன் பல பெற்றோர் சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு மாறியதில் இருந்தே, அக்கல்வி முறையின் அருமையை

உணரலாம். அதே கல்வி முறையின் மதிப்பீட்டு முறை அனைத்து பள்ளிகளுக்கும் வருகிறது என்றால் கட்டாயம் வரவேற்கத்தான் வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கருத்து தெரிவித்தனர்.



வி.பார்த்தசாரதி (முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர், மேலூர்):

தேர்வில் 'கிரேடிங்' முறை அமல்படுத்துவது பெரிதும் வரவேற்கத்தக்கது. கல்வியில் மாணவர்களின் சுமை குறைவதால் உண்மையிலேயே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தும். மேலும் திறன்களையும் மதிப்பீடு செய்வதால் மாணவரின் திறமை வளரும். இம்முறை செமஸ்டர் சிஸ்டம்போல இருப்பதால், ஒவ்வொரு பருவத்திலும் மாணவர்கள் மீது தனிஅக்கறை காட்ட முடியும். இதுவரை மனப்பாடம் செய்யும் மாணவர்கள், சிந்தித்து பதிலளிக்க வேண்டும் என்பதால், சிந்தனை திறன் மேம்படும். தேர்வில் அகமதிப்பீடு மதிப்பெண் இருப்பதால், ஆசிரியர்களிடம் மாணவர்களுக்கு பயம் கலந்த மரியாதை ஏற்படும்.



ஜி.கார்த்திக் ரகுநாத் (12ம் வகுப்பு, பி.கே.என்., மேல்நிலைப் பள்ளி, திருமங்கலம்):

மதிப்பெண் முறையில் மாணவர்களிடையே போட்டி ஏற்படும். ஒன்று, இரண்டு மதிப்பெண்கள் வேறுபடும் போது பொறாமையாகவும் மாறலாம். ஆனால் கிரேடு முறையில் அம்மாணவர்கள், ஒரே தரத்தில் இருப்பதால் போட்டியோ, பொறாமையோ ஏற்படுவதில்லை. பருவத் தேர்வு போல நடப்பதால், அந்தந்த பாடங்கள் அப்போதைக்கு அப்போது முடிந்து, பாடச்சுமை வெகுவாக குறையும். இதனால் சாதாரண மாணவர்களும் படிப்பில் ஆர்வம் காட்டுவர். அவர்கள் தேர்ச்சி பெறுவதும் எளிது. அதிகம் படிக்க வேண்டுமே என்ற மன

அழுத்தமும் இராது.



ப.சசிகலா (12ம் வகுப்பு, புனித ஜோசப் மெட்ரிக் பள்ளி, பழநி):

அரைத்த மாவையே அரைப்பதை தவிர்த்து, கல்வியின் வளர்ச்சிப் பாதையில் புரட்சிகரமான அம்சமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'பி', 'சி' கிரேடு பெறும் மாணவர்களுக்கு, 'ஏ' கிரேடு பெறுவதில் சிரமமில்லை என்ற மனநிலை உருவாகும். இதனால் தன்னம்பிக்கையுடன் படிக்க வாய்ப்பு கிடைக்கிறது. கல்லூரியில் உள்ள செமஸ்டர் முறை பற்றி, பள்ளியிலேயே அறியும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்தந்த பருவத்துக்குரிய பாடங்களை மட்டும் படிப்பதால், மனஅழுத்தம், புத்தகச் சுமை குறையும்.



தமிழ்ப் பெரியசாமி (ஓய்வு பெற்ற ஆசிரியர், திண்டுக்கல்):

தொடர் மற்றும் விரிவான மதிப்பீட்டு கல்விக் கொள்கை, கட்டாய கல்வி சட்டம், சி.பி.எஸ்.இ., போன்ற கல்வித் திட்டங்களை தழுவி, இந்த நடைமுறை அமைந்துள்ளது. மாணவர்களை மையப்படுத்தும் கல்வி முறை வலுப்பெறும். மூன்று பருவத் திட்டங்களால், மாணவர்கள் மீது பாடங்களை திணிப்பது குறையும். உடனடியாக மதிப்பிடும் திட்டம், மாணவர்களின் பல்திறன் வளர்ச்சிக்கு உதவும். மாணவர்களின் ஆளுமைத்திறன் வளரும். இத் திட்டத்தின் வெற்றி ஆசிரியர்கள் கையில் உள்ளது.



எம். கோகுல் (10ம் வகுப்பு, என்.எஸ்.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தேனி):

மாணவர்களுக்குள் ஈகோ பிரச்னை ஏற்படாது. படிப்பில் பொறாமை வராது. ஆரோக்கியமான ஒருங்கிணைந்த கல்வி வளர்ச்சிக்கு கிரேடு முறைதான் சிறந்தது. மாணவர்களின் பாடச்சுமையை குறைக்கவும் இதுவே சிறந்த வழிமுறை.



பி.சவுந்திரராஜன், (ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர், பழனிச்செட்டிபட்டி):

'கிரேடு' முறையில் மாணவர்களுக்கு ஊக்கம் கிடைப்பதால் திறமை வளரும். மதிப்பெண் குறையுமே என்ற தாழ்வு மனப்பான்மை வராது. மூன்று பருவங்களாக பிரித்து நடத்துவதால், மொத்தமாக பாடங்களை மனப்பாடம் செய்வதும், கடைசி நேர பதட்டமும் ஏற்படாது. புரிந்து படிப்பதால் சிந்தனை திறன் வளரும். கல்வியுடன் விளையாட்டு திறன் வளரும்.



பி.சாந்தினி (9ம் வகுப்பு, செய்யது அம்மாள் மேல்நிலை பள்ளி, ராமநாதபுரம்):

கிரேடு முறையில் 80 மதிப்பெண் எடுத்த மாணவனுக்கும், 99 மதிப்பெண் எடுத்த மாணவனுக்கும் ஒரே கிரேடுதான், என வரும்போது, படிக்கும் ஆற்றல் குறைந்து விடும். கிரேடு முறையினால், 80 மதிப்பெண்ணுக்கு எவ்வளவு படிக்க வேண்டுமோ, அவ்வளவுதான் படிப்போம்.



வி.ரத்னம் (தலைமை ஆசிரியர், ராஜா மேல்நிலை பள்ளி, ராமநாதபுரம்):

கிரேடு முறை, ஆரம்ப கால முறையாகும். இதை நடைமுறைப் படுத்தும்போது என்னென்ன சிக்கல் வருகிறது, என்பதை பொறுத்துத்தான் இதன் நன்மை, தீமையை ஆராய முடியும். நகர் பகுதியில் உள்ள மாணவர்களுக்கு சிந்திக்கும் ஆற்றலை வளர்க்க ஏராளமான விஷயங்கள் உள்ளன. கிராமப்புற மாணவர்களும் தனித்திறனை வளர்க்கும் அளவில், தேவையான வசதிகளை அரசு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.



எஸ்.வீரப்பன், (11ம் வகுப்பு, எஸ்.எம். எஸ். வி., ஆண்கள் பள்ளி, காரைக்குடி):

சராசரியாக ஒவ்வொரு பாடத்திலும் தேர்ச்சியடைவதற்கு 35 மதிப்பெண்கள் எடுத்தால் போதுமானது. இதை தெரிந்து கொண்டு மாணவர்களின் கல்வி தரத்தை அறிய முடியும். நன்றாக படிக்காத மாணவர்கள் மேலும் படித்து முன்னேற முயற்சிப்பர். இப்படி 'கிரேடு முறை' கொண்டு வருவதால் நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே இது சரிப்படலாம். சராசரி மாணவர்களுக்கு இது சரிவராது.



எஸ்.புவனேஸ்வரி, (ஆசிரியை, எஸ்.எம். எஸ்.வி., பெண்கள் பள்ளி, காரைக்குடி):

பள்ளிகளில் 'கிரேடு' முறை கொண்டு வருவதால் நன்கு படிக்கும் மாணவர்களின் மதிப்பெண்கள் தெரியாமல் போய்விடும். மாணவர்களை இந்த 'கிரேடு முறை' மனதளவில் பாதிக்கும்.



ஸ்ரீரத்னமணி (8ம் வகுப்பு, சத்ரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, விருதுநகர்):

'கிரேடு' முறையை அரசு கொண்டு வந்தது வரவேற்கதக்கது. இதனால் மாணவர்களின் மனப்பாடம் செய்யும் எண்ணம் மாறும். பாடம்தவிர, இதர திறன்களுக்கும் மதிப்பெண்கள் ஒதுக்கப்படுவதால் பிற திறமைகளும் வளரும். முதல் மதிப்பெண் பெற்றவர் மீதான பொறாமை எண்ணம் மாறுவதுடன், மாணவர்களிடம் உள்ள தாழ்வு மனப்பான்மையும் நீங்கும்.



சு.ஜோதிமணி ராஜன் (முதுநிலை ஆசிரியர், விருதுநகர்):

மாணவர்களிடையே வேறுபாடு இன்றி பழக வாய்ப்பு ஏற்படும். மதிப்பெண்ணை மறந்து, போட்டி, பொறாமையை மறைந்து, கிரேடுகளை பெறும் எண்ணம் மேலோங்கும். புத்தக சுமை குறைவதால் படிக்கும் ஆர்வம் அதிகரிக்கும். படிக்கும் மாணவர், படிக்காத மாணவர் என ஆசிரியரும் வேறுபடுத்தி பார்க்க முடியாத நிலை ஏற்படும்.



நமது சிறப்பு நிருபர்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us