Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/இரண்டு ஆண்டுகளாக பாதியில் நிற்கும் பாலம் :நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மெத்தனம்

இரண்டு ஆண்டுகளாக பாதியில் நிற்கும் பாலம் :நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மெத்தனம்

இரண்டு ஆண்டுகளாக பாதியில் நிற்கும் பாலம் :நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மெத்தனம்

இரண்டு ஆண்டுகளாக பாதியில் நிற்கும் பாலம் :நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மெத்தனம்

ADDED : அக் 06, 2011 09:23 PM


Google News
திருப்பூர் : திருப்பூரில், பல்லடம் - தாராபுரம் ரோட்டை இணைக்கும் 'ரிங்' ரோட்டில், வீரபாண்டி ஓடையின் குறுக்கே 45 லட்சம் ரூபாய் செலவில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி பாதியில் நிற்கிறது; இரண்டு ஆண்டுகளாக, அப்பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் தொடர்கிறது.திருப்பூரில், தாராபுரம் ரோடு - பல்லடம் ரோட்டை இணைக்கும் வகையில் வீரபாண்டி - பழவஞ்சிபாளையம் ரோடு அமைந்துள்ளது.

கனரக வாகனங்கள் பயன்படுத்தும் இந்த ரோட்டில், வீரபாண்டி ஊராட்சி பகுதியில் ஓடை உள்ளது. தரைப்பாலமாக இருந்த இந்த பாலத்தை உயர்மட்ட பாலமாக மாற்ற 45 லட்சம் ரூபாய் செலவில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுக்கு முன், உயர்மட்ட பாலம் கட்டுமான பணி துவங்கியது. இதற்காக, வீரபாண்டி ஊராட்சியின் பொது மயான சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு, மயானம் முழுவதும் மறிக்கப்பட்டது. மாற்றுப்பாதை அருகிலுள்ள தனியார் நிலத்தில் அமைக்கப்பட்டது. பாலம் கட்டுமான பணி துவங்கி, நான்கு தூண்கள் மட்டும் அமைக்கப்பட்டது. மேல்தளம் உள்ளிட்ட பாலம் பணிகள் கிடப்பில் போடப்பட்டன. இரண்டு ஆண்டுகளாக அப்பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் வகையில் தாராபுரம் ரோட்டில் இருந்து பல்லடம் ரோடு செல்லும் வாகனங்களும், பல்லடம் ரோட்டில் இருந்து தாராபுரம் ரோடு வரும் வாகனங்களுக்கும் முக்கிய ரோடாக உள்ள இந்த ரோட்டில் பாலம் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், வாகனங்கள் திருப்பூருக்குள் வந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.பாலம் பணிக்காக அமைக்கப்பட்ட மாற்றுப்பாதையும் தற்போது மாயமாகி, குண்டும், குழியுமாக உள்ளது. ஓடையில் வரும் கழிவு நீர் அனைத்தும் மாற்றுப்பாதையில் ஓடுவதால், இந்த இடத்தை கடக்க வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். வீரபாண்டி - பழவஞ்சிபாளையம் ரோட்டிலுள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்களும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.மயானமும் வீண்: வீரபாண்டி ஊராட்சிக்கான பொது மயானம், பாலம் கட்டுமான பணி நடக்கும் பகுதியில் அமைந்துள்ளதால், சுற்றுச்சுவர் அகற்றப்பட்டு, இடம் முழுவதும் பாலம் பணிக்காக ஆக்கிரமிக்கப்பட்டது. பாலத்தின் தூண்கள் அமைக்க தோண்டப்பட்ட குழியின் மண் மற்றும் கற்கள், கட்டுமான பொருட்கள் கிடப்பதால் மயானம் அடையாளத்தை இழந்துள்ளது. இதனால், இரண்டு ஆண்டுகளாக மயானத்தையும் இப்பகுதியினர் பயன்படுத்த முடியாத அவல நிலை உள்ளது.பாலம் பணிகளை உடனடியாக முடித்து, மயானத்தை பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் என இரண்டு ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் பல போராட்டங்கள் நடத்தியும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். உடனடியாக பாலம் பணியை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; இல்லையெனில், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கண்டித்து மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என இப்பகுதி மக்கள் எச்சரித்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us