"சார் போஸ்ட்..!' வாழ்க்கை முழுதும் சைக்கிள் பயணம்:தபால்காரர்களின் "அனுபவங்கள்'
"சார் போஸ்ட்..!' வாழ்க்கை முழுதும் சைக்கிள் பயணம்:தபால்காரர்களின் "அனுபவங்கள்'
"சார் போஸ்ட்..!' வாழ்க்கை முழுதும் சைக்கிள் பயணம்:தபால்காரர்களின் "அனுபவங்கள்'
ADDED : அக் 09, 2011 11:35 PM

மதுரை:முகவரி தேடி... முடிவில்லாத பயணம். சைக்கிளை மிதித்தே களைத்துப் போன கால்கள். உடல்நலமில்லாத நிலையிலும் 'சார் போஸ்ட்', என்கிற உரத்த குரல். மழை, வெயிலில் சங்கமித்து, மற்றவர்களுக்கு வரும் கடிதங்களை, பத்திரமாக கொண்டு சேர்க்கும் பாங்கு... ஒருநாளைக்கு நூறுமுறை சைக்கிளை 'ஸ்டாண்ட்' போட்டு, நிறுத்தும் நிதானம். கூரியர்களின் ஆதிக்கத்திலும், தபால்காரர்களின் அயராத சேவை...இன்று தேசிய தபால் தினம்.
பென்ஷனில் கமிஷன் கேட்காத, காசு கொடுத்தாலும் வாங்காத தபால்காரர்களைத் தேடினோம். மதுரை காந்திநகர் தபால் அலுவலகத்தில் சந்தித்த, இருவரும் ஓய்வு பெறும் வயதில் இருந்தனர். இவர்கள் மனந்திறக்கின்றனர்.எஸ். பாண்டன், திருநகர்: திருநகரில் புறநிலை அலுவலராக எட்டாண்டுகள் தற்காலிக பணி, கடந்த 26 ஆண்டுகளாக நிரந்தர பணியில் இருக்கிறேன். திருநகரில் தபால்காரராக இருந்தபோது, தணக்கன்குளம், பர்மா காலனியில் மோதல் ஏற்பட்டு, இரு ஊர்களுக்கும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. கடிதங்களை கொண்டு போனால், 'உயிருக்கு ஆபத்தாகி விடும்' என போலீசார் விட மறுத்தனர். மீண்டும் அலுவலகம் வந்து, அரசாங்கத்திலிருந்து மற்றவர்களுக்கு வந்த கடிதங்களை பிரித்து பார்த்தேன்.
ஒருவருக்கு கோர்ட்டிலிருந்து, மற்றவருக்கு சர்வே துறையிலிருந்து, திங்கட்கிழமை வரச்சொல்லி, நேர்முகக்கடிதம் வந்திருந்தது. அன்று சனிக்கிழமை, மறுநாள் அலுவலகம் விடுமுறை. தவித்துப் போனேன்.
உயரதிகாரியிடம் தகவல் சொன்னபோது, 'பிரச்னை ஏற்படும்' என மறுத்தனர். என்ன ஆனாலும் பரவாயில்லை, என்று இரு கடிதங்களையும் மாலை 5.30 மணிக்கு கொண்டு சேர்த்தேன். மனம் நிறைய நன்றி சொன்னார்கள். சிலர் மிகுந்த போதையில் இருக்கும் போது, சைக்கிளையும், தபால் பையையும் பிடுங்கிக் கொண்டு, பத்து ரூபாய் தரச் சொல்லி தொல்லை செய்வர். அவர்களுக்கு பத்து ரூபாய் கொடுத்துவிட்டு, வேலையை பார்ப்போம். மற்றவர்களுக்கு உதவும் வேலை செய்வது, கடவுள் கொடுத்த வரம். ஆனால், நாய்கள் தான் விடாமல் குரைக்கின்றன. மூன்று முறை கடியும் வாங்கியுள்ளேன், என்கிறார். கடந்த 2008ல், மதுரை மாவட்ட அளவில் சிறந்த தபால்காரர்களுக்கான விருதுக்கு, மக்களே தேர்ந்தெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆறுமாதங்களில் பணிஓய்வு பெற உள்ளார்.
பி. பாப்பன், செல்லம்பட்டி: நான்காண்டுகள் தற்காலிகப் பணி, கடந்த 30 ஆண்டுகளாக நிரந்தரப் பணியில் உள்ளேன். ஒருமுறை போதை பேர்வழி சைக்கிளை தடுத்து, தபால் பையை பிடுங்கிக் கொண்டு 'எனக்கு மணியார்டர் கொடு' என ரகளை செய்தார். உள்ளே மணியார்டர் கடிதங்கள் நிறைய இருந்தன. தினமும் இதே பகுதிக்கு வர வேண்டும் என்பதால், அவரிடம் கோபப்படுவது, சரியாக தோன்றவில்லை. அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் சொல்லி, அவரை சமாதானப்படுத்தி மணியார்டர் கடிதங்களை வாங்கி, உரியவர்களிடம் சேர்த்த பின்பே நிம்மதி ஏற்பட்டது.
நாங்கள் கொண்டு வரும் முதியோர் பென்ஷன், மணியார்டருக்காக முதியோர் தவமிருப்பர். ஒருமுறை, பாட்டி ஒருவருக்கு உடல்நலமில்லை. படுத்த படுக்கையில் இருந்த அவரின் கைரேகையை பெற்றுக் கொண்டு, பணத்தை கொடுத்தேன். பணத்தை கண்ணில் பார்த்த சந்தோஷத்தில் உயிரை விட்டார். இவர்களிடம் கமிஷன் வாங்குவது பாவம். வேலை செய்வதற்கு அரசு சம்பளம் தருகிறது, மற்றவர்களிடம் நாங்கள் ஏன் கைநீட்ட வேண்டும்? என்றார்.பத்து மாதங்களில் இவரும் ஓய்வுபெற உள்ளார்.


