ADDED : அக் 12, 2011 02:21 AM
ஆத்தூர்:ஆத்தூர் அருகே, லாரியை கடத்தி சென்று, கர்நாடகா பதிவு எண் மாற்றி
மோசடியாக விற்பனை செய்த சம்பவம் குறித்து, ஆத்தூர் போலீஸில் புகார்
செய்யப்பட்டுள்ளது. ஒரே லாரிக்கு, இரு வேறு பதிவு எண்களும், ஆர்.சி.,
பர்மிட் போன்ற ஆவணங்கள் உள்ளதால், போலீஸார் விசாரிக்க முடியாமல் திணறி
வருகின்றனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள மஞ்சினி ஏரிக்காடு பகுதியை
சேர்ந்தவர்கள் செல்வம், ராஜசேகரன். முன்னாள் ராணுவ வீரர்கரான இவர்கள்
இருவரும், கடந்த 2009ம் ஆண்டு மே மாதம், தலா, 75 ஆயிரம் ரூபாய் முதலீடு
போட்டு, அயோத்தியாப்பட்டணத்தில் உள்ள சக்தி ஃபைனான்ஸில், 5.50 லட்சம்
ரூபாய் கடன் பெற்று, டாரஸ் லாரி (எண்: டி.என் 30, சி-3726) ஒன்று
வாங்கியுள்ளனர். லாரி உரிமையாளருக்கு கொடுத்துள்ளனர். லாரியின் பதிவு
சான்று (ஆர்.சி.,) ராஜசேகரன் பெயரில் மாற்றி, 'எக்ஸ் சர்வீஸ்மேன்' என,
லாரியை ஓட்டி வந்துள்ளனர்.இந்நிலையில் கடந்த 2010ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி,
அதேபகுதியை சேர்ந்த சுந்தரம் மகன் மவுலீஸ்வரன் என்பவர், லாரியை வாடகைக்கு
எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார். அதையடுத்து, மாதம், 31 ஆயிரத்து, 500
ரூபாய் வாடகை ஒப்பந்த அடிப்படையில், லாரியை வாடகைக்கு விட்டுள்ளனர்.
பின்,
மூன்று மாதங்களுக்கு மேலாக வாடகை தராமலும், லாரி இருக்கும் இடம் குறித்து
தகவல் தெரிவிக்காமலும் மவுலீஸ்வரன் இருந்துள்ளார். லாரி உரிமையாளர்கள்
விசாரித்த போது, டாரஸ் லாரியை, 'ஸ்ரீ அம்மன்' என பெயர் மாற்றம் செய்ததோடு,
கர்நாடகா மாநிலத்தின் பதிவு எண்ணில் (கே.ஏ., 05, சி-8600), 'ஆர்.சி.,
மற்றும் பர்மிட்' ஆகியவற்றை மாற்றியது தெரியவந்தது.மேலும், ஆத்தூர்
மல்லியக்கரையை சேர்ந்த வரதராஜ் (எ) அன்பு என்பவர் மூலம் ராசிபுரத்தில் உள்ள
ஒரு ஃபைனான்ஸில் அடகு வைத்துள்ளதும் தெரியவந்தது. இதனிடையே, லாரியை
மோசடியாக விற்பனை செய்த மவுலீஸ்வரன் தலைமறைவாகியுள்ளார்.
இதுகுறித்து செல்வம் கொடுத்த புகாரின் பேரில், ஆத்தூர் போலீஸார் வழக்கு
பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். பெயர் மாற்றம் செய்துள்ள லாரி
போலீஸார் உதவியுடன் மீட்டு வந்து, ஆத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்தி
வைக்கப்பட்டுள்ளது.நேற்று லாரியின் பதிவெண் மற்றும் இன்ஜின் உள்ளிட்டவைகள்
குறித்து, ஆத்தூர் இன்ஸ்பெக்டர் ராஜாரணவீரன் தலைமையிலான குற்றப்பிரிவு
போலீஸார்கள் ஆய்வு செய்தனர். அப்போது, ஒரே லாரியில் தமிழ்நாடு மற்றும்
கர்நாடகா மாநிலத்தின் பதிவெண்கள் இருந்தது தெரியவந்தது.ஒரு லாரிக்கு,
இருவேறு பதிவெண்கள் இருந்ததால், லாரி மோசடி செய்தது
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இன்ஜின் நெம்பர் மாற்றம்
செய்துள்ளதாலும், தற்போது உள்ள கர்நாடகா மாநில பதிவெண்ணுக்கு உரிய ஆர்.சி.,
மற்றும் பர்மிட் மற்றும் பைனான்ஸ் போன்ற ஆவணங்களுடன் உள்ளதால், போலீஸார்
உறுதிப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.


