/உள்ளூர் செய்திகள்/சென்னை/பிரசாரத்தில் கொளுத்தும் சரவெடிகளால் மக்கள் அவதிபிரசாரத்தில் கொளுத்தும் சரவெடிகளால் மக்கள் அவதி
பிரசாரத்தில் கொளுத்தும் சரவெடிகளால் மக்கள் அவதி
பிரசாரத்தில் கொளுத்தும் சரவெடிகளால் மக்கள் அவதி
பிரசாரத்தில் கொளுத்தும் சரவெடிகளால் மக்கள் அவதி
ADDED : அக் 12, 2011 02:35 AM
சென்னை : மேயர் வேட்பாளர் பிரசாரத்தின் போது, தங்களின் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக, மாநகராட்சி கவுன்சிலர் வேட்பாளர்கள் சார்பில், கொளுத்தும் சரவெடிகளால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதற்கும் தேர்தல் ஆணையம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.ஒவ்வொரு தேர்தலின் போதும், கட்சிகள் தங்களின் செல்வாக்கை நிரூபிக்க ஆங்காங்கே ஆளுயர பேனர்கள்; சாலை முழுவதும் சுவரொட்டிகள்; வீட்டு சுவர்களின் அனுமதியின்றி வரையப்படும் விளம்பரங்கள்; சாலையில் சோடா மூடிகளால் கட்சி சின்னங்கள்; சந்து சந்தாக ஆட்டோக்களில் அலறும் ஒலிப்பெருக்கிகள் என, அந்த ஒரு மாத காலத்திற்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைப்பது வழக்கம். ஆனால், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின்போது, தேர்தல் கமிஷனின் கைதான் ஓங்கியிருந்தது. தேர்தல் நடப்பதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லாமல் இருந்தது. இதனால், பல ஆண்டுகள் தவித்து வந்த மக்கள், நிம்மதி பெருமூச்சு விட்டனர். தற்போது, நடக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும் அது பிரதிபலித்து வருகிறது.ஆனால், சென்னை நகரில் மேயர் வேட்பாளர் பிரசாரத்தின் போது, அந்த வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களால், 50 மீட்டர் தூரத்திற்கு ஒரு முறை கொளுத்தி போடப்படும் சரவெடிகளால், பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். சாலையில் நடப்போர், குழந்தைகள், வயதானவர்கள் என பல்வேறு தரப்பினரும் இந்த வெடிச் சத்தத்தால் அலறி ஓடுகின்றனர்.இதுகுறித்து பாதிக்கப்படும் பொதுமக்கள் மற்றும் பொதுநலச் சங்கத்தினர் சிலர் கூறியதாவது:முன்பு தேர்தல் வருகிறது என்றாலே, பொதுமக்களுக்கு பீதி தான். வீட்டு சுவர்கள் வீணாகும். நள்ளிரவு வரை ஆட்டோக்களில் மைக்செட் அலறும். ஆனால், கடந்த தேர்தலில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது.ஆனால், தற்போது புதிய கலாசாரமாக சரவெடிகளின் சத்தம், காதை பிளக்கிறது. அதுவும், தேர்தல் நெருங்குவதால் வெடிசத்தம் கூடுதலாக கேட்கிறது. குறிப்பாக மேயர் வேட்பாளர் வருகிறார் என்றால், அவர்கள் செல்லும் இடங்கள் எல்லாம் வெடி சத்தம் தான். ஒவ்வொரு இடத்திலும், 10 ஆயிரம் வாலா சரவெடிகளை கொளுத்துகின்றனர். 50 மீட்டர் இடைவெளியில் விட்டு விட்டு, தொடர்ந்து வெடி வைப்பதால் சத்தம் காதை பிளக்கிறது. இதற்கு பயந்து பொதுமக்கள் வெளியே வருவதே இல்லை. ஏற்கனவே, தெரு முழுவதும் குப்பை கூளங்களாக காட்சியளிக்கிறது. இதுபோதா குறைக்கு, சரவெடிகளை கொளுத்தி சாலையில் குப்பை குவியல்களை சேர்க்கின்றனர். இப்பிரச்னைக்கும் தேர்தல் ஆணையம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஒரு தொகுதியில் மேயர் வேட்பாளர் வலம் வந்தால், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெடிகளை கொளுத்துகின்றனர். இதையும் தேர்தல் கணக்கில் சேர்க்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


