ADDED : அக் 12, 2011 11:26 PM

வடமதுரை பேரூராட்சி 4 வது வார்டில், மகளிர் சுய உதவிக்குழுக்களின் களப்பணியாளர் புவனேஸ்வரி சுயேச்சையாக களம் இறங்கியுள்ளார்.
அவருடன் பிரசாரத்திற்கு செல்லும் மகளிர் குழுவினர், அடுக்கு மொழி வசனங்களால் அசத்தி வருகின்றனர். 'வீடு இருந்தா ரோடு இல்லை;ரோடு இருந்தா சாக்கடை இல்லை; சாக்கடை இருந்தா கழிவுநீர் போக வழி இல்லை; பொன்னான வாக்குகளை அள்ளிச் சென்றவர்களுக்கு நம்ம குறை தீர்க்க நேரம் இல்லை; இனிமேலும், மனுவை ஏந்தி அலைய நமக்கு தெம்பும் இல்லை' என, 'சுரீர்' பிரசாரம் செய்கின்றனர். வழக்கமாக, மகளிர் குழுக்களை 'வளைத்து' ஓட்டுக்களை அள்ளும் கட்சிகளின் வியூகம், இங்கு பலிக்கவில்லை. சுய உதவிக்குழுவினரே நேரடியாக களம் இறங்கியுள்ளதால், கட்சி வேட்பாளர்களுக்கு லேசான கலக்கம் தான்.


