PUBLISHED ON : அக் 13, 2011 12:00 AM

அப்பப்பா என்ன ஒரு விசுவாசம்?
கட்சித் தலைவர்கள் மீது, தாங்கள் வைத்திருக்கும் விசுவாசத்தை காட்டுவதற்காக, அரசியல் கட்சியின் நிர்வாகிகள், தங்களால் எவ்வளவு செய்ய முடியுமோ, அந்த அளவுக்கு காரியங்களை செய்து வருகின்றனர். தலைவரின் பிறந்த நாளன்று, கோவிலில் தேர் இழுப்பது, மண் சோறு சாப்பிடுவது, தலைவரின் பெயரை, கையில் பச்சை குத்திக் கொள்வது என, கட்சி நிர்வாகிகளின் விசுவாசத்துக்கு, ஒரு அளவு இல்லாமல் போய் விட்டது. ராஜஸ்தான் முதல்வரும், அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான அசோக் கெலாட் மட்டும், சளைத்தவரா என்ன? வயது அதிகமாகி விட்டாலும், கட்சித் தலைவர் சோனியா மீது, தான் வைத்துள்ள விசுவாசத்தை காட்டுவதற்கு, நேரம் பார்த்துக் கொண்டிருந்தவருக்கு, சமீபத்தில் ஒரு அரிய வாய்ப்பு கிடைத்தது. ஒரு கிராமத்தில் நடந்த விழாவில் பங்கேற்பதற்காக சென்ற அசோக் கெலாட், கட்சியின் உள்ளூர் நிர்வாகி ஒருவரின் வீட்டுக்கு சென்றார். அந்த நிர்வாகியோ, 'என் மனைவிக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. நீங்கள் தான் ஒரு நல்ல பெயராக வைக்க வேண்டும்' என, கெலாட்டிடம் வலியுறுத்தினார். கெலாட்டும், சிறிதும் தயங்காமல், 'நம்ம தலைவியின் பெயரை விட, வேறு நல்ல பெயர் இருக்கிறதா என்ன? குழந்தைக்கு சோனியா என்று பெயர் வைத்து விடுகிறேன்' என, அங்கு நின்றிருந்த பத்திரிகையாளர்களுக்கு கேட்க வேண்டும் என்பதற்காக, சத்தமாக கூறினார். இதன்பின் பத்திரிகையாளர்களின் அருகில் வந்த கெலாட், 'கட்சித் தொண்டர்களின் குழந்தைக்கு மட்டும் தான், சோனியா என பெயர் வைத்துள்ளேன் என நினைக்காதீர்கள். பல ஆண்டுகளுக்கு முன்பே, என் மகளுக்கும் சோனியாவின் பெயரைத் தான் வைத்தேனாக்கும்' என, விசுவாசத்தை வெளிப்படுத்திய மகிழ்ச்சியில், வேகமாக இடத்தை காலி செய்தார்.


