Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கடலூர் ரயில்வே சுரங்கப்பாதை பணிக்கு டெண்டர் : நெடுஞ்சாலை துறைக்கு கலெக்டர் உத்தரவு

கடலூர் ரயில்வே சுரங்கப்பாதை பணிக்கு டெண்டர் : நெடுஞ்சாலை துறைக்கு கலெக்டர் உத்தரவு

கடலூர் ரயில்வே சுரங்கப்பாதை பணிக்கு டெண்டர் : நெடுஞ்சாலை துறைக்கு கலெக்டர் உத்தரவு

கடலூர் ரயில்வே சுரங்கப்பாதை பணிக்கு டெண்டர் : நெடுஞ்சாலை துறைக்கு கலெக்டர் உத்தரவு

ADDED : ஜூலை 25, 2011 11:00 PM


Google News

கடலூர் : கடலூர் ரயில்வே சுரங்கப்பாதை பணிக்கான டெண்டர் விட நெடுஞ்சாலை துறைக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளதால் பணி விரைவில் துவங்கப்பட உள்ளது.கடலூர் நகரின் இதயப் பகுதியாக உள்ள லாரன்ஸ் ரோட்டில் பஸ் நிலையம், ரயில்வே ஸ்டேஷன், வர்த்தக நிறுவனங்கள் உள்ளதால் எப்போதும் போக்குவரத்து அதிகமாக இருக்கும்.

இச்சாலையில் உள்ள ரயில்வே லெவல் கிராசிங் கேட் அடிக்கடி மூடப்படுவதால் போக்குவரத்திற்கு நெரிசல் அதிகரித்து சாலையை கடந்து செல்ல 20 நிமிடங்களுக்கு மேலாகும். இதனால் தடையற்ற போக்குவரத்திற்கு ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என பொது நல அமைப்புகள் பல ஆண்டுகளாக போராடி வந்தன.



அதனையேற்று லாரன்ஸ் ரோட்டில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க அரசு அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து ரயில்வே, நெடுஞ்சாலை மற்றும் நகராட்சி நிர்வாகங்கள் இணைந்து சுரங்கப்பாதை அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்து திட்ட அறிக்கை மற்றும் வரைபடம் தயாரித்து அரசுக்கு அனுப்பியது.அதனையேற்ற தமிழக அரசு ரயில்வே சுரங்கப்பாதை திட்டப் பணியை செயல்படுத்த நெடுஞ்சாலை துறைக்கு கடந்த 2009ம் ஆண்டு இறுதியில் 22.44 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்தது. ரயில்வே நிர்வாகம் சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்கு 2.47 கோடி ரூபாயிற்கு கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி டெண்டர் விட்டது.சுரங்கப்பாதை அமைய உள்ள இடத்தில் இரண்டு குடிநீர் குழாய்களை அகற்ற கடலூர் நகராட்சி நிர்வாகத்திற்கு 1.85 கோடி ரூபாயை நெடுஞ்சாலை துறை ஒதுக்கீடு செய்தது. நகராட்சி நிர்வாகம் ஒரு குழாயை மாற்றும் பணிக்கு 90 லட்சம் ரூபாய்க்கு கடந்த செப்டம்பர் மாதமும், மற்றொரு குழாயை அகற்ற 95 லட்சம் ரூபாய்க்கும் கடந்த 13ம் தேதி டெண்டர் விட்டது.



அதனைத் தொடர்ந்து சுரங்கப்பாதைக்கான இணைப்பு சாலை அமைக்கும் பணிக்கு 4.50 கோடி ரூபாய் மதிப்பில் கடந்த 11.2.2011ல் நெடுஞ்சாலை துறை டெண்டர் அறிவித்தது. அப்போது இத்திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி அனைத்து வியாபார சங்கங்களின் பேரவை செயலர் ஜெயபாலன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் தற்போதைய நிலை இரண்டு வாரங்களுக்கு நீடிக்க வேண்டும் என இடைக்கால தடை உத்தரவை கடந்த 11.3.11ம் தேதி வழங்கினர்.இந்த உத்தரவைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத் துறை, சுரங்கப்பாதை பணியை கிடப்பில் போட்டது. இதனைக் கண்டித்து பொதுநல இயக்கங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். மேலும், கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.



அதனைத் தொடர்ந்து கடந்த 21ம் தேதி கலெக்டர் அமுதவல்லி தலைமையில் நடந்த கூட்டுக்குழு கூட்டத்தில் நகராட்சி கமிஷனர் இளங்கோவன், குடிநீர் குழாயை அகற்றும் பணிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும், பணி துவங்குவதற்கான ஆணை விரைவில் வழங்கப்பட உள்ளதாக கூறினார்.ரயில்வே தரப்பில் சுரங்கப்பாதை பணிக்கு டெண்டர் விட்டு தயாராக உள்ளதாகவும், நகராட்சி நிர்வாகம் குடிநீர் குழாயை அகற்றும் பணியை துவங்கும் அன்றே தாங்களும் பணியை துவங்குவதாக கூறினர்.நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், சுரங்கப்பாதை பணிக்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளதாக கூறினர்.



அப்போது பொது நல அமைப்பினர் இரண்டு வாரத்திற்கு மட்டுமே இடைக்கால தடை வழங்கி இருப்பதை ஆதாரத்துடன் சுட்டிக் காட்டினர்.அதனை ஆய்வு செய்த கலெக்டர், நீங்கள் ஒதுக்கிய நிதியை கொண்டு நகராட்சி நிர்வாகம் பணியை துவங்க டெண்டர் விட்டுள்ள நிலையில், கோர்ட் வழங்கிய இடைக்கால உத்தரவு கால அவகாசம் முடிந்த பிறகும் ஏன் டெண்டர் விடவில்லை என கேள்வி எழுப்பினார். அதனைத் தொடர்ந்து இணைப்பு சாலை பணிக்கான டெண்டரை வரும் ஆகஸ்ட் இரண்டாம் வாரத்திற்கு விட்டு பணியை துவங்க நெடுஞ்சாலை துறைக்கு உத்தரவிட்டார்.மார்க்கெட்டிற்குமாற்று வழி ஏற்பாடுரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பட்சத்தில் அருகில் உள்ள பான்பரி மார்க்கெட்டிற்கு சரக்கு ஏற்றி வரும் லாரிகள் வர வழியில்லை என மார்க்கெட் பகுதி வியாபாரிகள் கூறினர். அதற்கு வருவாய் துறை அதிகாரிகள், ரயில்வே மேம்பாலத்தை ஒட்டியுள்ள 'சர்வீஸ் ரோட்டை' மார்க்கெட் வரை நீட்டித்து தருவதாக உறுதியளித்தனர்.



ரயில்வே கேட்டை மூடி ஒத்திகைரயில்வே சுரங்கப்பாதை பணி துவங்கினால் போக்குவரத்தை மேம்பாலம் மற்றும் வண்டிப்பாளையம் சாலையில் திருப்ப வேண்டும். இதனால் அந்த சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்றித் தர போக்குவரத்து போலீசார் வலியுறுத்தினர்.அதனை ஏற்றுக் கொண்ட கலெக்டர் வண்டிப்பாளையம் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத் துறைக்கு உத்தரவிட்டார். மேலும், பணியை துவங்கினால் போக்குவரத்தை எப்படி சீரமைப்பது என்பதை முன்கூட்டியே ஒத்திகை பார்க்க போலீசாருக்கு அறிவுரை கூறினார். அதன்படி ஓரிரு நாளில் (நாளை அல்லது நாளை மறுநாள்) லாரன்ஸ் ரோட்டில் உள்ள ரயில்வே கேட் முழுமையாக மூடி போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது குறித்து ஒத்திகை மேற்கொள்ள போலீசார் முடிவு செய்துள்ளனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us