Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/மெட்ரோ ரயில் திட்டம்: மண் பரிசோதனை நடப்பது எப்படி?

மெட்ரோ ரயில் திட்டம்: மண் பரிசோதனை நடப்பது எப்படி?

மெட்ரோ ரயில் திட்டம்: மண் பரிசோதனை நடப்பது எப்படி?

மெட்ரோ ரயில் திட்டம்: மண் பரிசோதனை நடப்பது எப்படி?

ADDED : ஜூலை 14, 2011 11:03 PM


Google News

சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் திட்டத்திற்காக, சுரங்க பாதை தோண்டுவதற்கு முதல்கட்டமாக, மண் பரிசோதனை பணி நடக்கிறது.

மண்ணின் தன்மையை அறிந்து கொண்டு, அதற்கேற்ற துளையிடும் இயந்திரங்களை வரவழைப்பதற்காக, இப்பணி நடக்கிறது. சென்னை, வண்ணாரப்பேட்டை- விமான நிலையம், சென்ட்ரல் - பரங்கிமலை ஆகிய வழித்தடத்தில், மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடக்கின்றன. வண்ணாரப்பேட்டை - மீனம்பாக்கம் வழித்தடத்தில், வண்ணாரப்பேட்டையிலிருந்து, சைதாப்பேட்டை வரை, 14.3 கி.மீ., வரையிலும், சென்ட்ரல் - பரங்கிமலை வழித்தடத்தில், சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரை, 12.3 கி.மீ., வரையிலும் சுரங்க ரயில் பாதை அமையவுள்ளது.



சுரங்க ரயில் பாதை அமையவுள்ள இடங்களில் தற்போது, மண் பரிசோதனை பணி நடக்கிறது. சுரங்க ரயில் நிலையம் மற்றும் சுரங்க ரயில் பாதை அமைப்பதற்காக, டெண்டர் எடுத்துள்ள ஐந்து தனியார் நிறுவனங்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளன. சென்ட்ரல், எழும்பூர், கீழ்ப்பாக்கம், அண்ணாநகர், எல்.ஐ.சி., ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சாலையின் நடுவில் தடுப்பு வைத்து, மண் பரிசோதனை பணி நடக்கிறது.

மண் பரிசோதனை எப்படி நடக்கிறது, எதற்காக இந்த பரிசோதனை என்பது குறித்து மெட்ரோ ரயில் திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது: சுரங்க ரயில் பாதை, பூமியிலிருந்து, 30 மீட்டர் ஆழத்தில் அமையவுள்ளது. ரயில் பாதை அமைக்க, சுரங்கம் தோண்ட வேண்டும்.



இதற்காக, துளையிடும் இயந்திரம் (டனல் போரிங் மெஷின்) வெளிநாடுகளிலிருந்து வரவழைக்கப்படவுள்ளது.

பொதுவாக, மண்ணின் தன்மை சில இடங்களில் கடினத் தன்மையாகவும், ஒரு சில இடங்களில் நெகிழ்வுத் தன்மையாகவும் இருக்கும். பல இடங்களில் கடினபாறை இருக்கும். எனவே, மண்ணின் தன்மைக்கு ஏற்ப, துளையிடும் இயந்திரம் வரவழைக்க வேண்டும். இதற்காகவே மண் பரிசோதனை பணி நடக்கிறது. சுரங்க ரயில் பாதை அமையவுள்ள இடத்தில், ஒவ்வொரு, 250 மீட்டர் தூரங்களுக்கு இடையே மண் பரிசோதனை செய்யப்படுகிறது.



இதற்காக, மண் பரிசோதனை செய்யும் இடத்தில், 30 மீட்டர் ஆழத்திற்கு துளையிட்டு, மண் மாதிரி எடுக்கப்படுகிறது. ஒரு இடத்தில் மண் பரிசோதனைக்காக துளையிடும் பணி, இரண்டு அல்லது மூன்று நாட்கள் நடக்கும். இந்த மண் மாதிரி, அரசால் அங்கீகரிக்கப்பட்ட மண் பரிசோதனை மையங்களுக்கு, அனுப்பப்படுகிறது. கம்ப்யூட்டர் மூலம் மண் பரிசோதனை நடத்தி, மண்ணின் தன்மை குறித்து, அறிக்கை பெறப்படும். அதன் பின்னர், மண்ணின் தன்மைக்கு ஏற்றவாறு துளையிடும் இயந்திரம் வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்படும். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.



சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், மெட்ரோ ரயில் திட்டம், 14 ஆயிரத்து 600 கோடி ரூபாய் செலவில் நடக்கிறது. சைதாப்பேட்டை சின்னமலையிலிருந்து மீனம்பாக்கம் விமான நிலையம் வரையிலும், கோயம்பேட்டிலிருந்து பரங்கிமலை வரையிலும் உயர்த்தப்பட்ட ரயில் பாதைக்காக, பாலம் கட்டும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது. சுரங்க ரயில் பாதைக்காக, மண் பரிசோதனை பணியும், தற்போது துவங்கியுள்ளது. 2015ம் ஆண்டில் மெட்ரோ ரயில் திட்டம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



- நமது சிறப்பு நிருபர் -







      Our Apps Available On




      Dinamalar

      Follow us