ADDED : ஜூலை 25, 2011 10:47 PM
திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் பகுதி மற்றும் கொடைக்கானல், தாண்டிக்குடி பகுதியில் மழை கொட்டியது.
ஆடி மாதம் துவங்கியது முதல் காற்றின் வேகம் அதிகரிக்கும் என, எதிர்பார்த்தது ஏமாற்றமே மிஞ்சியது. காற்றின் போக்கு அதிகம் இல்லாததால் தென் மேற்கு பருவமழை சாரல் கிடைக்காது என, எதிர்பார்க்கப்பட்டது. இதனால் ஆடிப்பட்டத்தில் விதைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு பொய்த்தது. இந்நிலையில் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் திண்டுக்கல் நகர் மற்றும் சுற்றுப்புறங்களில் பரவலாக மழை கொட்டியது. ஒன்றரை மணி நேரம் தொடர்ந்து பெய்த மழை மாலை 4 மணிக்கு நின்றது.
சிறிது இடைவெளிக்கு பிறகு மீண்டும் இரவு 7 மணிக்கு துவங்கிய மழை, அரை மணி நேரம் தொடர்ந்து பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் தணிந்தது. நகரில் தாழ்வான பகுதிகளில் வடிகால் வசதியில்லாததால் மழை நீர் ரோட்டில் சென்றது. அறிகுறியே இல்லாமல் பெய்த திடீர் தொடர் மழையால் திண்டுக்கல் வாசிகள் சற்று திணறிப்போயினர். கொடைக்கானல்: நேற்று காலை துவங்கிய மழை, இடைவிடாமல் மாலை 6 மணி வரை, விட்டு விட்டு பெய்தது. இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப் பட்டது. தாண்டிக்குடி: நேற்று மதியம் 12 மணி முதல், கனமழை பெய்தது. மதியம் 2 மணி நிலவரப்படி, 18.மி.மீ., மழை பதிவானது. கடந்த சில வாரங்களாக வறண்ட வானிலை நீடித்த நிலையில், தற்போது பெய்த மழை குடிநீர் தேவையை ஒரளவு பூர்த்தி செய்யும்.


