/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தேர்தல் பார்வையாளரை முற்றுகையிட்ட வாக்காளர்கள்தேர்தல் பார்வையாளரை முற்றுகையிட்ட வாக்காளர்கள்
தேர்தல் பார்வையாளரை முற்றுகையிட்ட வாக்காளர்கள்
தேர்தல் பார்வையாளரை முற்றுகையிட்ட வாக்காளர்கள்
தேர்தல் பார்வையாளரை முற்றுகையிட்ட வாக்காளர்கள்
ADDED : அக் 08, 2011 12:14 AM
கோவை : பட்டியலில் பெயர் நீக்கப்பட்ட நரசிம்மநாயக்கன்பாளையம் வாக்காளர்கள், 'தங்களது பெயரை மீண்டும் சேர்க்க வேண்டும்' என்று வலியுறுத்தி, நேற்று மாவட்ட கலெக்டர் மற்றும் தேர்தல் பார்வையாளரை முற்றுகையிட்டனர்.கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில், ஏராளமான போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக, அ.தி.மு.க.,வினர் புகார் கிளப்பினர்; வடக்கு தாலுகா அலுவலகத்தில் புகுந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.விசாரித்த வருவாய்த்துறை அதிகாரிகள், பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்ட 616 வாக்காளர் பெயரை நீக்கி விட்டனர்.
பெயர் சேர்க்கைக்கு காரணமான துணை தாசில்தாரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 'கடந்த சட்டசபை தேர்தலின்போது பயன்படுத்திய வாக்காளர் பட்டியல் அடிப்படையில் தான் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்' என்றும், அ.தி.மு.க.,வினரிடம் அதிகாரிகள் உறுதியளித்தனர்.பட்டியலில் பெயர் நீக்கியதால் பாதிக்கப்பட்ட தி.மு.க.,வினர் உள்ளிட்டோர், நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தனர். தேர்தல் பணி ஆய்வுக்கூட்டம் முடிந்து வெளியில் வந்த தேர்தல் பார்வையாளரான மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி நிரஞ்சன் மார்டி, கலெக்டர் கருணாகரன் ஆகியோரை முற்றுகையிட்டனர்.'அ.தி.மு.க.,வினர் புகார் தெரிவித்த காரணத்தால், நரசிம்மநாயக்கன் பாளையத்தில் மட்டும் 616 வாக்காளர்கள் பெயர், பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விட்டது. இவர்கள் அனைவரும் உண்மையான வாக்காளர்கள். விசாரிக்காமலேயே பட்டியலில் பெயரை நீக்கி விட்டனர்' என்று, சேர்மன் பதவிக்கான தி.மு.க., வேட்பாளர் சீனிவாசன் உள்ளிட்டோர், அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர்.அப்போது கலெக்டர் கருணாகரன், 'பட்டியலில் பெயர் சேர்க்கக்கோரி மனு கொடுத்திருந்தால், ஒப்புகைச்சீட்டு இருக்க வேண்டும். அது அவர்களிடம் இல்லை. மொத்தமாக விண்ணப்பங்கள் தரப்பட்டுள்ளன. அதுவும் தவறு. எனவே தான் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன' என்றார்.எனினும், தி.மு.க.,வினர் தொடர்ந்து வாக்குவாதம் செய்தனர். 'தங்களுக்கு வாக்களிக்கும் உரிமை வேண்டும். தீர விசாரித்து, உண்மையான வாக்காளர்கள் ஓட்டளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்' என்று வலியுறுத்தியபடி இருந்தனர். போலீஸ் கமிஷனர் அமரேஷ் புஜாரி, கலைந்து போகும்படி கூறினார். 'புகார் பற்றி விசாரித்து தக்க நடவடிக்கை எடுப்பதாக' தேர்தல் பார்வையாளர் நிரஞ்சன் மார்டி உறுதியளித்த பிறகே, அனைவரும் கலைந்து சென்றனர்.


