
ஸ்ரீநகர்:'காஷ்மீருக்கு உச்சபட்ச சுயாட்சி வழங்கும் விதத்தில், அங்குள்ள அனைத்து கட்சிகளுடனும் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தையை மத்திய அரசு தொடங்க வேண்டும்' என மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் பிரகாஷ் கராத் கேட்டு கொண்டுள்ளார்.
நேற்று ஸ்ரீநகரில் பேட்டியளித்த அவர் இது குறித்து கூறியதாவது:காஷ்மீர் பிரச்னையை சட்டம் ஒழுங்குப் பிரச்னையாக கருதுவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்.
அம்மாநில மக்களின் அடையாளத்தை காக்கும் வகையில் இருக்கும் சிறப்பு சலுகைகளை அங்கீகரிக்கும் வகையில் பேச்சுவார்த்தை அமைய வேண்டும். இந்தப் பாதையில் செல்வதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தவறி விட்டது.அதேபோல், ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும், கல்லெறிவோரை எதிர் கொள்ள போலீசார் சுடக் கூடாது என்று ஆணை விதிக்கப்பட வேண்டும்.இவ்வாறு பிரகாஷ் கராத் தெரிவித்துள்ளார்.


