/வாராவாரம்/பொக்கிஷம்/மாசாய் மாரா அழைக்கிறது

மாசாய் மாரா அழைக்கிறது

மாசாய் மாரா அழைக்கிறது

மாசாய் மாரா அழைக்கிறது

மாசாய் மாரா அழைக்கிறது

PUBLISHED ON : ஏப் 07, 2026 05:15 PM


Google News
Latest Tamil News
ஆப்பிரிக்காவின் இதயம் என்று அழைக்கப்படும் கென்யாவின் மாசாய் மாரா தேசியக் காப்பகம், இப்போது ஒரு புதிய பொலிவுடன் காட்சியளிக்கிறது. நாரோக் பகுதியில் அமைந்துள்ள இந்த இயற்கை சொர்க்கம், ஏப்ரல் மாதத்தின் ரம்மியமான சூழலில் விலங்குகளின் சொர்க்கபுரியாக மாறியுள்ளது.Image 1559900பொதுவாக ஆப்பிரிக்கக் காடுகள் என்றாலே வறண்ட புற்களும், புழுதி பறக்கும் பாதைகளுமே நினைவுக்கு வரும். ஆனால், இப்போது அங்கு 'பசுமைப் பருவம்' . ஏப்ரல் தொடக்கத்தில் பெய்யும் மிதமான மழையினால், மாரா சமவெளி முழுவதும் அடர் பச்சை நிறப் புற்கள் கம்பளம் விரித்தாற்போலக் காட்சியளிக்கின்றன.Image 1559901வானம் மேகமூட்டத்துடன், இதமான வெப்பநிலையுடன் இருப்பதால், விலங்குகள் தாகத்திற்காக அலையாமல் உற்சாகமாக உலா வருகின்றன. புகைப்படக் கலைஞர்களுக்குத் தேவையான அந்த 'டிராமேட்டிக்' பின்னணி ஒளியும், பசுமை நிறமும் இப்போது அங்கு தாராளமாகக் கிடைக்கிறது.Image 1559902மாசாய் மாராவின் அடையாளமே அதன் சிங்கக் கூட்டங்கள்தான் . தற்போதைய ஏப்ரல் மாத சூழலில், சிங்கங்கள் தங்கள் இணைகளுடன் இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதையும், அதிகாலை வேளையில் பனிமூட்டத்திற்கு இடையே கம்பீரமாகத் தங்கள் எல்லையைக் கண்காணிப்பதையும் காண முடிகிறது.Image 1559903உயர்ந்து வளர்ந்துள்ள புற்கள் சிங்கங்களுக்குச் சிறந்த மறைவிடத்தைத் தருகின்றன. இவை புற்களுக்குள் பதுங்கி நின்று, எப்போது வேண்டுமானாலும் பாயத் தயாராக இருக்கும் அந்தப் பார்வை, பார்ப்பவர்களைப் பிரமிக்க வைக்கும்.Image 1559904மாசாய் மாராவின் பரந்து விரிந்த சமவெளியில், யானைக் கூட்டங்கள் தங்களின் குட்டிகளுடன் நீண்ட தூரம் அணிவகுத்துச் செல்வது ஒரு கண்கொள்ளாக் காட்சி. மழையினால் நீர்நிலைகள் நிரம்பியுள்ளதால், யானைகள் மகிழ்ச்சியுடன் சேற்றில் விளையாடுவதையும், பசுமையான இலைகளைத் தின்று களிப்பதையும் இப்போது பார்க்கலாம். இவற்றின் நிதானமான நடை, சவன்னாவிற்கே ஒரு தனி மரியாதையைத் தருகிறது.Image 1559905மற்ற விலங்குகளை விடச் சிறுத்தைகளைப் படம் பிடிப்பது ஒரு சவால். ஆனால் மாசாய் மாராவின் திறந்தவெளிப் புல்வெளிகள் இதற்குச் சாதகமானவை. தற்போதைய சூழலில், சிறுத்தைகள் உயர்ந்த புற்களுக்கு இடையே அமர்ந்து கொண்டு, வெகு தொலைவில் மேயும் மான்களைக் குறிவைப்பதைக் காணலாம். அவற்றின் மஞ்சள் நிறத் தோலும், அதில் உள்ள கருப்புப் புள்ளிகளும் மாசாய் மாராவின் பசுமைக்கு இடையே ஒரு அழகான முரண்பாட்டைக் கொடுக்கின்றன.Image 1559906சிங்கம், யானை, சிறுத்தை தவிர்த்து, இங்கு ஒட்டகச்சிவிங்கிகள், வரிக்குதிரைகள் மற்றும் நீர்யானைகள் எனப் பல்லாயிரக்கணக்கான விலங்குகள் இயற்கையோடு இணைந்து வாழ்கின்றன.இங்கு ஜூலை மாதத்தில் நடக்கும் 'பெரிய இடப்பெயர்வு' கூட்ட நெரிசலாக இருக்கும். ஆனால், இப்போது நிலவும் அமைதியான சூழலும், பசுமையான காட்சியும் மாசாய் மாராவை ஒரு ஓவியம் போல மாற்றியுள்ளது.

வனவிலங்கு ஆர்வலர்களே! கேமராக்களுடன் கிளம்புங்கள்... மாசாய் மாரா உங்களை அன்புடன் அழைக்கிறது!

-எல்.முருகராஜ்.