/வாராவாரம்/சிந்திப்போமா/வாழ்க்கையில் மீண்டெழ 'தோள் கொடுக்கும்' தோல் தானம்!வாழ்க்கையில் மீண்டெழ 'தோள் கொடுக்கும்' தோல் தானம்!
வாழ்க்கையில் மீண்டெழ 'தோள் கொடுக்கும்' தோல் தானம்!
வாழ்க்கையில் மீண்டெழ 'தோள் கொடுக்கும்' தோல் தானம்!
வாழ்க்கையில் மீண்டெழ 'தோள் கொடுக்கும்' தோல் தானம்!
UPDATED : டிச 27, 2023 08:35 AM
ADDED : டிச 27, 2023 03:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கற்பகவள்ளி
கட்டுரையாளர், உடுமலை ஜி.வி.ஜி.விசாலாட்சி பெண்கள் கல்லுாரி, வரலாற்றுத்துறை பேராசிரியர் மற்றும் தேசிய மாணவர் படை அலுவலராக உள்ளார். 2016ல் சிறந்த மலையேற்ற பயிற்சியாளர் விருது; 2018ல் சிறந்த வழிநடத்துநர் விருது பெற்றவர்.
ஆசிட் வீச்சினால், பலரது வாழ்க்கை பல கோணங்களில் மாறியுள்ளன. இளம் வயது பெண்கள் தான், இந்த மாதிரியான பாதிப்புகளால் அதிகம் அவலத்தை சந்தித்து வருகின்றனர். இப்போது சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளதால், பாதிப்பு ஓரளவு குறைந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் குறித்து, ஆய்வு நடத்தியதில், 70 சதவீதம் பேர், வளர் இளம் பருவத்திலுள்ள பெண்கள் என தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள், உடல் அளவில் காயங்கள் மறைந்தாலும், மனதளவில் மற்றவர்களை சந்திக்கக்கூட தயாராக இருப்பதில்லை. தங்களுக்கென தனி உலகமாக ஒரு அறைக்குள் முடங்குகின்றனர். சுய நம்பிக்கை இழந்து, உருவ கேலிக்கு ஆளாகிவிடுவோம் என்ற அச்ச உணர்வுதான் அவர்களுக்கு அதிகம் உள்ளது.
விழிப்புணர்வு தேவை
சர்வதேச அளவில், ஓராண்டுக்கு, 1,500 பேர் ஆசிட் வீச்சுகளால் பாதிக்கப்படுகின்றனர். அதில், அதிகமான பாதிப்புகள் பதிவாகும் நாடுகளில், இந்தியாவும் ஒன்று என்பது வேதனையாக உள்ளது.
குறைந்தபட்சமாக, ஆண்டுக்கு 200 பேர் பாதிப்புக்குள்ளாகின்றனர். வட மாநிலங்களில் இந்த பாதிப்பு அதிகம் காணப்படுகிறது. இளம் தலைமுறையினர், எதிர்பாலினத்தவர்கள் மீது அன்பு செலுத்தி, அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளாதபோது வன்முறையை கையாளுகின்றனர். கல்வி நிறுவனங்கள், பெற்றோர் என ஒருங்கிணைந்த ஒரு கட்டமைப்பினர் ஒத்துழைத்து செயல்படுவதால் மட்டுமே, இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.
இன்றைய சமூகத்தில், பெண்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து, அடிக்கடி விழிப்புணர்வு வழங்கப்படுகிறது. ஆனால், அவர்களின் வாழ்க்கையை சிதைக்கும், இதுபோன்ற நடவடிக்கைகளில் ஆண்கள் ஈடுபடாமல் இருப்பதை தடுக்க, விழிப்புணர்வு என்பது மிக குறைவுதான். இந்த பாதிப்பை முற்றிலுமாக குறைப்பதற்கு, சட்டங்கள் கூடுதலாக கடுமையாக்கப்பட வேண்டும். அதேபோல், பாதிக்கப்பட்டவர்கள் மீண்டு வருவதற்கான வழிமுறைகளையும் ஊக்குவிக்க வேண்டும்.
தோல் வங்கிகள்
பட்டாசு தொழிற்சாலை உட்பட பலவிதமான ஆபத்தான சூழலில் பணிசெய்பவர்களும், தீ விபத்துகளை எதிர்கொள்கின்றனர்.
ஆசிட் வீச்சுகளால் மட்டுமின்றி, பலவிதமான தீக்காயங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், காயப்பட்ட இடங்களில் வேறுதோல் பொருத்துவதற்கு சிகிச்சை மேற்கொள்ளப்படும்.
அதற்கென தோல் வங்கிகள் மருத்துவமனைகளில் செயல்படுகின்றன. இந்தியாவில் மொத்தமாக 17, தமிழகத்தில் சென்னை மற்றும் கோவை மருத்துவமனைகளில் தோல் வங்கிகள் உள்ளன.
இன்றைய நிலையில் தீ விபத்து மட்டுமில்லாமல், சாலை விபத்துகளால் பாதிக்கப்படுபவர்களுக்கும் மனித தோலின் தேவை அதிகரித்து வருகிறது. ஆனால் தேவை இருக்கும் அளவுக்கு, வசதிகள் இல்லாததால், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்படுகிறது.
தோல் தானம்
தோல் வங்கிகளில் மிக குறைவாக இருப்பு இருப்பதால், பலரும் சிகிச்சைக்கு விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். தோல் தானம் செய்வது குறித்து, போதிய விழிப்புணர்வு இல்லாததுதான், இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
பலரும் உடல் உறுப்புகளை தானம் செய்கின்றனர். ஆனால், அதில் தோல் தானம் கூடுதலாக செய்ய தவறுகின்றனர். இதனால் அவர்களின் உறுப்புகள் மட்டுமே எடுக்கப்படுகிறதே தவிர, தோல் பயனில்லாமல் போகிறது. தானமாக வழங்கப்படும் தோல், அந்த வங்கியில் ஐந்து ஆண்டுகள் வரை பராமரிக்கப்படுகிறது.
கண்தானம், ரத்ததானம், உடல்உறுப்பு தானம் போல தோல் தானமும் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை மீட்டு தருவதில், மிக முக்கிய பங்கு வகிக்கிறது.


