
உட்கட்சி அரசியல்
ஜன., 3ல் மதுரையில் ஆதரவாளர்களிடையே பேசிய அழகிரி, இப்படி பேசியதன் பின்னணியில் தான் புறக்கணிக்கப்பட்டது, அவமானப்படுத்தப்பட்டதன் வலியை நன்றாகவே வெளிப்படுத்தினார். 'கட்சிக்கு நான் என்ன துரோகம் செய்தேன்' என்றும் கேட்டார். கட்சி துவங்க வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்தும், இன்றைய அரசியல் நிலை குறித்தும் ஆதரவாளர்களின் ஆலோசனைகளை கேட்ட அழகிரி, பின் மேடையில் பேசிய தி.மு.க., உட்கட்சி அரசியல் எல்லாம், 'அக்மார்க்' ரகம்!'தி.மு.க., வளர்ச்சிக்கு நான் எப்படி உதவினேன்; தேர்தல் வெற்றிகளுக்கு நான் எப்படி உழைத்தேன். ஸ்டாலினுக்கு எப்படி பதவிகள் வாங்கி கொடுத்தேன்' என்பது பற்றியதாகவே அது இருந்தது. மாறாக அவர் ஆளுங்கட்சிகளான, அ.தி.மு.க., - பா.ஜ., பற்றியோ, பிற கட்சிகள் பற்றியோ ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
ஆட்டம் போட்டது யார்?
இன்னொரு ரகசியத்தையும் அழகிரி அப்பட்டமாக உடைத்திருக்கிறார். கருணாநிதி உடல்நலம் குன்றி இருக்கும் போது அவரை சந்தித்த அழகிரி, 'என்னை ஏன் கட்சியில் சேர்க்க மாட்டேன் என்கிறீர்கள்?' எனக் கேட்டபோது, 'இவர்கள் ஆட்டமெல்லாம் அடங்கட்டும்; கொஞ்சம் பொறுத்திரு' என்று கருணாநிதி கூறியதை குறிப்பிட்டார்.யார் ஆடிய ஆட்டத்தை கருணாநிதி கூறியிருக்கிறார்; யார் அடங்கட்டும் என கருணாநிதி நினைத்திருக்கிறார். இவருக்கு பதவி தரக்கூடாது என தி.மு.க., தலைவரையே நிர்ப்பந்தம் செய்தது யார் என்பது எல்லாம் தி.மு.க., தொண்டர்களுக்கே வெளிச்சம்.
பதவி போர்கள்
கடந்த, 20 ஆண்டுகளாக தி.மு.க.,வில் தாண்டவமாடிய பதவி போர்கள், பதவி தட்டிப்பறிப்பு, பதவி பிடிப்பு பற்றி அவர் பேசியது சற்று சுவாரஸ்யமாகவும் இருந்தது.பொது வெளியில் அவ்வளவாக அறியப்படாத இரண்டு உண்மைகள், அழகிரி மேடை பேச்சில் இருந்து வெளிப்பட்டன. ஸ்டாலின் துணை முதல்வரானதும், தி.மு.க., பொருளாளரானதும் அழகிரியின் சிபாரிசு, ஒத்துழைப்பால், அனுமதியால் தான் என்பதே அது. ஸ்டாலினின் அரசியல் வாழ்வில் மிக உன்னதமாக இந்த இரு பதவிகள் பெறுவதற்கும், அழகிரி முட்டுக்கட்டை போடவில்லை; மாறாக சிபாரிசு செய்தார் என்பதற்கு, கூடவே இருந்த கட்சி பிரமுகர்கள் பெயரையும் குறிப்பிட்டார் அழகிரி.
ஸ்டாலின் பதிலளிப்பாரா?
மூத்தவரான அழகிரி பதவிகளை பெறும் போது, இளையவர் ஸ்டாலின் இந்த பதவிகளை கேட்டு வாங்கியிருக்கிறார் என்பது, இப்போது அழகிரியின் வாக்குமூலம் மூலம் புரிகிறது. வீடுகளில் அண்ணனுக்கு அப்பா புதிதாக ஏதாவது வாங்கி கொடுத்தால், தம்பி தனக்கும் வேண்டும் என்று கேட்டு அடம்பிடிப்பது போல! ஸ்டாலின் இப்படி பதவிகளை வாங்கியதற்கு என்ன காரணம் என அழகிரி வார்த்தையில் சொல்வது என்றால்... 'பொறாமை!'தான் பொறாமை தம்பியா என ஸ்டாலின் பதில் சொன்னால் தானே நமக்கு தெரியும்!


