Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/மவுனம் கலைகிறது!

மவுனம் கலைகிறது!

மவுனம் கலைகிறது!

மவுனம் கலைகிறது!

ADDED : டிச 09, 2016 09:18 AM


Google News
Latest Tamil News
சிவசிவ சாமியார் என்பவர், 'சிவசிவ' என்று எப்போதும் உச்சரித்துக் கொண்டிருப்பார். இதைத்தவிர வேறு எதையும் பேசாத அவர், ஊரார் கொடுக்கும் உணவை மட்டும் ஏற்றுக் கொள்வார். அந்த துறவியை வேறு ஏதாவது பேச வைக்க வேண்டும் என ஒரு இளைஞன் திட்டமிட்டான். அதற்காக தன் நண்பனின் உதவியை நாடினான்.

இருவரும் துறவி இருக்குமிடம் வந்தனர். அவரிடம் பேச்சு கொடுத்தனர். அவர் பதிலேதும் சொல்லவில்லை. அவருக்கு கோபம் வரும் வகையில் கடுமையான வார்த்தைகளைப் பேசினர். அப்போதும் அவர் அமைதியாகவே இருந்தார். பொறுமையிழந்த அவர்கள், 'இருவரும் சண்டையிடுவது போல கைகலப்பில் ஈடுபடுவோம். அப்போது இவர் என்ன செய்கிறார் என்று பார்க்கலாம்' என்று முடிவெடுத்தனர்.

இருவரும் சண்டையிட ஆரம்பித்தனர். சிறிது நேரத்தில் நிலைமை தலைகீழானது. விளையாட்டு வினையாகும் என்பார்களே....அதன்படி, ஒருவன் தற்செயலாக இன்னொருவனை பலமாக அடிக்க, அவனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது.

பதிலுக்கு அவன் தன் நண்பனை பலமாகத் தாக்க, பொய் சண்டை நிஜமான சண்டையானது. இதில் ஒருவனுக்கு உடம்பே வீங்கி விட்டது. ஊர் பஞ்சாயத்தாரிடம் நடந்ததைச் சொல்லி முறையிட்டான்.

பஞ்சாயத்தார், “இருவரின் சண்டையை நேரில் பார்த்த சாட்சி யாராவது இருக்கிறார்களா?” என்று கேட்டனர்.

“இருக்கிறாரே.... ஊரிலுள்ள சிவசிவ சாமியார் கேளுங்கள். உண்மை தெரியும்” என்றனர்.

“வாயே திறக்காத சிவசிவ சாமியார் எப்படியப்பா நடந்ததைச் சொல்வார்?” என்றார் பஞ்சாயத்து தலைவர்.

“சாமியார் மட்டும் தாங்க சாட்சி. வேற யாரும் சண்டையைப் பார்க்கவில்லை” என்று இருவரும் சொன்னதால், வேறு வழியின்றி சிவசிவ சாமியார்

பஞ்சாயத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

இதைக் கேள்விப்பட்ட ஊர் மக்களும் சாமியார் பேசுவதைக் காணத் திரண்டனர்.

அவரை வணங்கிய பஞ்சாயத்து தலைவர், “சாமி! நீங்க தான் நடந்ததைச் சொல்ல வேண்டும்” என்றார்.

துறவியும் தலையசைத்து நடந்ததைச் சொல்ல முன் வந்தார்.

இளைஞர் இருவருக்கும் மனதிற்குள் மகிழ்ச்சி உண்டானது.

“பரவாயில்லையே! தங்களுக்குள் நிஜமாகவே சண்டை ஏற்பட்டாலும் சாமியார் மவுனத்தை கலைக்கப் போறாரே!” என்ற ஆவலுடன் அவர் என்ன சொல்லப்போகிறார் என்று எதிர்பார்த்து நின்றனர்.

அப்போது துறவி இருவரையும் கையால் சுட்டிக் காட்டியபடி, “இச்சிவத்தை அச்சிவம் சிவ! அச்சிவத்தை இச்சிவம் சிவ! இச்சிவமும் அச்சிவமும் சிவசிவ” என்றார்.

ஒன்றும் புரியாததால் பஞ்சாயத்து தலைவர் விழித்தார்.

அப்போது பெரியவர் ஒருவர், “இவன் அவனை அடித்தான். அவன் இவனை அடித்தான். அதன் பின் இருவரும் மாறி மாறி அடித்துக் கொண்டனர்,” என்று விளக்கமளித்தார்.

இதைக் கேட்டதும் இளைஞர் இருவரும் துறவியின் காலில் விழுந்தனர்.

“துறவியே! தாங்கள் மனதிற்குள் மட்டுமல்ல! வாய் திறந்தாலும் சிவ நாமமே சொல்கிறீர்கள். இந்த மனப்பக்குவம் யாருக்கு வரும் இனி நாங்களும் எங்களால் முடிந்தவரை சிவநாமம் சொல்லுவோம். இருப்பினும், உங்களுக்கு இடைஞ்சல் தந்த எங்களுக்கு தக்க தண்டனையை நீங்களே கொடுங்கள்,” என்றனர்.

மனம் திருந்திய இளைஞர்களை அன்புடன் தழுவிக் கொண்டார் துறவி.

அங்கு கூடியிருந்த மக்களும் துறவியை வணங்கினர். 'சிவசிவ' என்று துறவி சொல்ல, அங்கிருந்த எல்லாரும் சிவநாமத்தை முழங்கினர்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us