Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/வரி போட்டால் என்னாகும்?

வரி போட்டால் என்னாகும்?

வரி போட்டால் என்னாகும்?

வரி போட்டால் என்னாகும்?

ADDED : டிச 23, 2016 10:47 AM


Google News
Latest Tamil News
மன்னர் சதானிகன் தானங்கள், யாகங்கள் செய்து தேவர்களை மகிழ்ச்சிப்படுத்தினார். இதனால் அவரது நாட்டு மக்கள் செழிப்பாக வாழ்ந்தனர். இவரது மறைவுக்குப் பின் அவரது மகன் ஆட்சிப்பொறுப்பு ஏற்றான். அவனுக்கு தானம், யாகத்தில் எல்லாம் நம்பிக்கையில்லை. நாடு சுபிட்சம் இழந்தது. கஷ்டப்பட்ட மக்கள் சபித்தனர். வேதியர்கள் மன்னனுக்கு, யாகத்தின் நன்மை, தானத்தின் பெருமையை எடுத்துச் சொல்லியும் அவன் கேட்கவில்லை.

“தானம் செய்தவர்கள் இறுதிக் காலத்திற்கு பின்பு சொர்க்க வாழ்வை அனுபவித்து, மீண்டும் உத்தம குலத்தில் பிறப்பார்கள் என்று சொல்கிறீர்கள். அப்படிப்பார்த்தால் தானம் அதிகமாக செய்த என் தந்தையும் எங்காவது நல்ல இடத்தில் பிறந்திருக்க வேண்டும். இப்போது அவர் எங்கிருக்கிறார் என்பதை நிரூபித்தால், தானத்தை நானும் செய்கிறேன்,” என்றான்.

இது முடியாத காரியம் என்பதால், வேதியர்கள் அவனிடம் மேற்கொண்டு ஏதும் பேசவில்லை. அவர்கள் சூரிய பகவானிடம் நாட்டின் நலன் வேண்டி பிரார்த்தித்தனர்.

சூரியபகவான் ஒரு முதிர்ந்த வேதியரின் வடிவத்தில் வந்து, அவர்களை பார்க்கவ முனிவரிடம் அழைத்துச் சென்றார்.

அவரிடம் எல்லாரும் நாட்டின் நிலையை எடுத்துக் கூறினர். அவர், தன் தவ வலிமையால், சதானிக மன்னரின் தற்போதைய நிலையை அறிந்து வர கிளம்பினார். சூரியனும் உடன் சென்றார். எமதர்மராஜாவை சந்தித்தால் தான், மன்னரின் மறுபிறவி பற்றி அறியமுடியும் என்பதால், இருவரும் எமலோகத்துக்கு புறப்பட்டனர்.

வழியில் எதிர்பட்ட ஒருவன் பார்க்கவரிடம், தனக்கு தர வேண்டிய கூலியைக் கேட்டான். பார்க்கவர் புரியாமல் விழிக்கவே, அவன் பூர்வ ஜென்மத்தில் பார்க்கவருக்கு புராணங்கள் சொல்லிக்கொடுத்தவன் என்றும், அதற்கு கூலி தரவில்லை என்றும் சொல்லி அவரது புண்ணியத்தில் ஆறில் ஒரு பங்கை பெற்றுக் கொண்டான். பின், பார்க்கவருக்கு பால் கொடுத்தவர், துணி நெய்து கொடுத்த நெசவாளர் என ஒவ்வொருவராக வந்து அவர் செய்த முழு புண்ணியத்தையும் பெற்றுக் கொண்டனர்.

புண்ணியம் இழந்ததால் பார்க்கவரால் அதற்கு மேல் செல்ல முடியவில்லை. எனவே சூரியன் அவரைச் சுமந்து சென்றார்.

இருவரும் எமலோகம் அடைந்தனர். அங்கு சதானிக மன்னர் நரக தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்தார். பார்க்கவருக்கு ஒன்றும் விளங்கவில்லை. தான தர்மங்கள் செய்தவர் ஏன் நரகத்தில் இருக்கிறார் என்று குழப்பம்!

தன் சந்தேகத்தை மன்னரிடமே கேட்டார்.

அவர், “நான் அதிகமான தானம் செய்திருந்தாலும், ஏழை மக்களிடம் இருந்து கடுமையாக வரிவசூல் செய்த பணத்தையே செலவிட்டேன். அது பாவக்கணக்கிலேயே சேர்ந்தது. அதன் பலனை அனுபவிக்கிறேன். இந்த நிலை என் மகனுக்கும் வரக்கூடாது. எனவே அவனிடம் மக்களுக்கு நான் விதித்த வரிகளை குறைக்கச் சொல்லுங்கள். அதுவே மிகச்சிறந்த தானம்,” என்றார்.

சூரியன் தன் மகனான எமதர்மராஜாவின் அனுமதியுடன் சதானிகரை பூமிக்கு அழைத்து வந்தார். மன்னரை ஒரு மறைவிடத்துக்கு வரச்சொல்லி தந்தையைக் காட்டினார். அவன் அசந்து விட்டான்.

சதானிகன் தன் மகனிடம், யாகத்துக்கு தடையாக இருக்கக்கூடாதென்றும், வரிகளை குறைத்து ஏழை மக்களை காக்க வேண்டுமென்றும் புத்திமதி சொல்லி மறைந்தான். மன்னனும் வரிகளைக் குறைத்தான்.

மக்கள் வரிபணத்தில் சொகுசாக வாழ்க்கை நடத்தும் அரசியல்வாதிகளுக்கு நரகம் காத்திருக்கிறது....புரிகிறதா...!





      Our Apps Available On




      Dinamalar

      Follow us