Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய குருபெயர்ச்சி பலன்கள்

rasi

கும்பம்எந்த நிலையிலும் யாருடைய தயவையும் நாடாமல் சுயமாக வாழ இருக்க விரும்பும் கும்ப ராசி அன்பர்களே!

உங்களுக்கு இதுவரை குருபகவான் 7ம் இடத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை செய்து கொண்டிருந்தார். அவரால் நீங்கள் பல்வேறு உன்னதமான பலன்களை அடைந்திருக்கலாம். உங்கள் செல்வாக்கு உயர்ந்திருக்கும். நினைத்ததை நிறைவேற்றி இருப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரித்திருக்கும். தேவைகள் பூர்த்தியாகி இருக்கும். வீடு மனை வாங்கி இருப்பீர்கள். அல்லது வசதியான வீட்டிற்கு குடிபுகுந்து இருப்பீர்கள். சனி, ராகு, கேது ஆகியோர் சாதகமற்ற இடத்தில் இருந்து பிற்போக்கான பலன்களை தந்திருந்தாலும் குருவின் பலத்தால் சற்று நிமிர்ந்திருப்பீர்கள். இந்த நிலையில் இப்போது குருபகவான் 8ம் இடமான கன்னி ராசிக்கு அடியெடுத்து வைத்திருக்கிறார். இது அவ்வளவு சிறப்பான நிலை அல்ல. 8ம் இடத்தில் இருக்கும் குரு பகவான் பொதுவாக மன வேதனையும், நிலையற்ற தன்மையும் கொடுப்பார் என்றாலும், அவரது 7ம் இடத்து பார்வைக்கு அதீத சக்தி உண்டு. நீங்கள் செல்லும் பாதையில் பனித்திரை போல ஏதோ தோன்றினாலும், சூரியன் வந்ததும் கரைந்து விடுவது போல சிரமங்கள் கட்டுக்குள் வந்து விடும்.

மீன ராசியில் விழும் அந்த பார்வை உங்களுக்கு எந்த இடையூறு வந்தாலும் முறியடித்து வெற்றிக்கு வழி வகுக்கும். எனவே குரு இப்போது அஷ்டமத்து குருவாக மாறி சாதகமற்ற நிலையில் இருக்கிறாரே என்று நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். முக்கிய கிரகமான சனி பகவான் இப்போது உங்கள் ராசிக்கு 10ம் இடத்தில் இருக்கிறார். இதுவும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. எனினும் அவர் உங்கள் ராசிநாதன் என்பதால், மனதார செய்யும் சிறு பரிகாரத்திற்கே கட்டுக்குள் வந்து விடுவார். ராகு 7ம் இடமான சிம்மத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம் அல்ல. இடப்பெயர்ச்சியையும், தரம் தாழ்ந்தவர்களின் சேர்க்கையால் அவப்பெயரையும் சந்திக்க நேரலாம். கேது உங்கள் ராசியில் இருக்கிறார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. ஆக எல்லா கிரகங்களுமே சாதகமற்ற நிலையில் இருந்தாலும், குரு உங்களுக்கு 55 மார்க் போட்டு தேற்றியிருக்கிறார். குருவின் ஏழாம் பார்வையால் பொருளாதார வளம் இருக்கும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கும் வல்லமையை பெறுவீர்கள். இடையிடையே குறுக்கிடும் தடைகளை உங்கள் இனிய புத்திசாலித்தனமான அணுகுமுறையால் முறியடிப்பீர்கள். சிலர் வீடு, மனை வாங்க முயற்சி மேற்கொள்வர். வண்டி வாகனங்கள் வாங்கலாம். ஆனால் அதற்காக கடன் வாங்க நேரிடும். அதோடு அதிக பிரயாசப்பட வேண்டியிருக்கும். பெரும்பாலானோருக்கு அதற்கான வாய்ப்பு இல்லை.மதிப்பு, மரியாதை சுமாராக இருக்கும். வீண்விவாதங்களில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் தேவைகள் பூர்த்தியாகும். கணவன், மனைவி அன்பு நீடிக்கும். அவ்வப்போது சிற்சில பிரச்னைகள் தலை துõக்கலாம். ஆனால் உங்கள் சாதுர்யத்தாலும் விட்டுக் கொடுக்கும் பக்குவத்தால் எதையும் சமாளித்து முன்னேறலாம். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் முயற்சியின் பேரில் கைகூடும். பொதுவாக அனாவசிய செலவை தவிர்ப்பது நல்லது. ஆடம்பர பொருட்களை நாடவேண்டாம்.

தொழில், வியாபாரம்:  தொழிலதிபர்கள், வியாபாரிகள் சீரான வளர்ச்சி காண்பர். உழைப்புக்கு ஏற்ற வருமானத்தை காணலாம். புதிய வியாபாரம் தொடங்குவதோ, அதிக முதலீடு போடுவதோ இப்போது வேண்டாம். அதைவிட இருப்பதை சிறப்பாக நடத்துவதே சிறப்பு. பங்குதாரர்கள் இடையே விட்டுக் கொடுத்து போவது நல்லது. எதிர்பாராத வகையில் செலவுகள் ஏற்படலாம். எனவே சிக்கனம் தேவை. போட்டியாளர்கள் தொல்லை இருக்கத்தான் செய்யும். சற்று கவனம் தேவை. இரும்பு, அச்சு, காகிதம், பத்திரிகை போன்ற தொழில் நடத்துபவர்கள் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதே நேரம் தரகு, அதிகாரம், ஆதாரம் இல்லாத தொழில்கள் சிறப்பாக நடக்கும். தொழில் அதிபர்கள் அரசின் சோதனைக்கு ஆளாகலாம் என்பதால் வரவு செலவு கணக்கை தெளிவாக வைத்திருப்பது நல்லது.

பணியாளர்கள்: கடந்த காலத்தைப் போல கூடுதல் அனுகூலத்தை பெற முடியாது. வேலைப்பளு இருக்கத்தான் செய்யும். அலைச்சலும் இருக்கும். அதிக முயற்சி எடுத்தால் கோரிக்கைகள் நிறைவேறும். மேல் அதிகாரிகளிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். வழக்கமான பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றுக்கு தடையில்லை. சிலருக்கு திடீர் இடமாற்றம் ஏற்படலாம். உங்கள் பொறுப்புகளை தட்டிக்கழிக்க வேண்டாம். அதேபோல் யாரையும் நம்பி உங்கள் வேலையை ஒப்படைக்க வேண்டாம்.

கலைஞர்கள்: புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க சற்று சிரத்தை எடுக்க வேண்டியிருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம்.

அரசியல்வாதிகள்: சுமாரான நிலையில் இருப்பர். பிரதிபலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியிருக்கும். பணப்புழக்கம் ஓரளவு இருக்கும்.

மாணவர்கள்: கடந்த கல்வி ஆண்டு பலருக்கு சிறப்பாக அமைந்திருக்கும். அதன் மூலம் இந்த ஆண்டு மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கலாம். ஆனால் இந்த கல்வி ஆண்டில் அதேபோல் பலன் கிடைக்காது. அதிக சிரத்தை எடுத்து படிக்க வேண்டி வரும். குருவின் பார்வையால் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும்.

விவசாயம்: பணப்பயிர்களில் சுமாரான வருமானம் இருக்கும். மானாவாரி பயிர்களில் சிறப்பான வருவாய் கிடைக்கும். அதிக செலவு பிடிக்கும் பயிர்களையும், கறுப்பு தானிய வகைகளையும், பழவகைகளையும் பயிரிடுவதைத் தவிர்க்கவும். புதிய நிலம் வாங்கும் முயற்சியில் தடை ஏற்பட்டு விலகும். வழக்கு, விவகாரங்களில் தீர்ப்பு கிடைக்க தாமதம் ஆகலாம். புதிய வழக்கு விவகாரங்களில் சிக்க வேண்டாம்.

பெண்கள்: ஓரளவு பலன் காண்பர். கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் சுமூகமாக நடப்பதன் மூலம் நற்பெயரைத் தக்க வைக்கலாம். வேலைக்கு செல்லும் பெண்கள் அதிக பளுவை சுமக்க வேண்டி வரும். வீட்டுச்செலவுக்கு பிரச்னை இருக்காது. குழந்தைகளால் நற்பெயர் கிடைக்கும். உஷ்ணம், தோல் தொடர்பான வியாதியால் அவதிபட்டவர்கள் பூரண குணம் அடையலாம். தாயாரின் உடல்நிலையும் தேறும்.

பரிகாரம்: வியாழக்கிழமை தோறும் நவக்கிரக சன்னிதியிலுள்ள குருவை வணங்குங்கள். சனி, ராகு கேதுவுக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது அர்ச்சனை செய்யுங்கள். ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு நடத்துங்கள்.


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us