Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

rasi

கன்னிகருணை உள்ளம் கொண்ட கன்னி ராசி அன்பர்களே! (80/100)
 
துர்முகி ஆண்டில் சனி பகவான் உங்கள் ராசிக்கு 3ம் இடத்தில் இருக்கிறார். இது உன்னத நிலை. அவர் உங்கள் முயற்சிகள் அனைத்தையும் வெற்றி அடைய செய்வார். பொருளாதார வளத்தை மேம்படுத்துவார். தொழிலில் சிறந்தோங்க செய்வார். கேது 6-ம் இடத்தில் இருக்கிறார். அவரால் பொன்னும், பொருளும் தாராளமாக கிடைக்கும். காரிய அனுகூலம் ஏற்படும். ராகு 12-ம் இடத்தில்  இருக்கிறார். இங்கு அவர் பொருள் விரயத்தையும், வெளிநாட்டு அல்லது வெளியூர் பயணத்தையும் கொடுப்பார். குரு பகவான் வக்கிரம் அடைந்து 12-ம் இடமான சிம்மத்தில் உள்ளார். குரு 12ம் இடத்தில் இருக்கும் போது பொருள் இழப்பு ஏற்படலாம். சில விஷயங்களில் தடைகள் உருவாகும். வீண் அலைச்சல் ஏற்படும். அவர் ஆக. 2 வரை சிம்மத்தில் உள்ளார். அதன் பிறகு வக்கிர நிவர்த்தி அடைந்து உங்கள் ராசிக்கு மாறுகிறார். அப்போது அவரால் கலகம், விரோதம் வரும் என்றும், மந்த நிலை ஏற்படும் என்றும் பொதுவாக கூறப்படுவது உண்டு. ஆனாலும் கவலைபட வேண்டாம். குரு பகவான் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது அனைத்துப் பார்வைகளும் சிறப்பாக உள்ளதால் சோதனைகளின் தாக்கம் குறைந்து விடும். கிரகநிலைகளின் மொத்த அடிப்படையில் நீங்கள் செய்யும் செயல்கள் முயற்சியின் பேரில் வெற்றிகரமாகவே முடியும். பணப்புழக்கத்துக்கு குறை இருக்காது. மதிப்பு மரியாதை சிறப்பாக இருக்கும்.

பொருளாதார வளம் இருந்து கொண்டே இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். கணவன்- மனைவி இடையே அவ்வப்போது மனக்கசப்பு வரத்தான் செய்யும். ஆனால் அவை உங்கள் அணுகுமுறை, பொறுமையால் விலகிவிடும். ஆக.2க்கு பிறகு குருவின் பார்வையால் சுபநிகழ்ச்சிகள் கைகூடும். அதற்காக சற்று முயற்சி எடுக்க வேண்டியிருக்கும். சுபச் செலவுகளால் கடன்படலாம். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு மகப்பேறு பாக்கியம் கிடைக்கும். உறவினர் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து உங்களுடன் ஒத்துப்போகும் நிலை வரும்.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு ஆக. 2 வரை ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகலாம்.  அரசின் உதவி அவ்வளவு எளிதாக கிடைக்காது. போட்டியாளர்களின் இடையூறு அவ்வப்போது தலைதுõக்கினாலும் அதை எளிதில் முறியடித்து விடுவீர்கள். ஓரளவு லாபம் இருக்கும். ஆக.2க்கு பிறகு பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். லாப பணத்தை புதிய தொழில்களில் முதலீடு செய்ய முயற்சி எடுப்பீர்கள். போட்டியாளர்களை உண்டு, இல்லை என ஒரு வழி செய்து விடுவீர்கள். புதிய வியாபாரம் அனு கூலத்தை தரும். எண்ணற்ற பல வசதிகள் கிடைக்கும்.

பணியாளர்களுக்கு ஆக. 2 வரை வேலைப்பளு இருக்கத்தான் செய்யும். மேல்  அதிகாரிகளின்  ஆதரவு இருந்தாலும், சிலரது சதியால் இடமாற்றம் தந்து விடுவார்களோ என்ற பயமும் தொடரத் தான் செய்யும். ஆக.2க்கு பிறகு குருவின் பார்வையால் வேலையில் திருப்தி  காண்பீர்கள். மதிப்பு,
மரியாதை சிறப்பாக இருக்கும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். சிலர் புதிய பதவி கிடைக்க பெறுவர். சம்பள உயர்வு, பதவி உயர்வு, தற்போதைய பணியிடத்திலேயே தொடர்தல் ஆகிய நற்பலன்கள் நடக்கும்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். எனினும் எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம்.

அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் ஓரளவுக்கே பலன் பெறுவர். எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற வருமானத்தை காணலாம். மானாவாரி பயிர்களில் அதிக மகசூல் கிடைக்கும். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் புதிய சொத்து வாங்க வாய்ப்புகள் வரலாம்.

மாணவர்கள் சிரத்தை எடுத்து படிப்பது நல்லது.ஆக.2க்கு பிறகு குருவின் பார்வையால் அதிக வளர்ச்சியை எதிர்நோக்கலாம். ஆசிரியர்களின் அறிவுரை உதவிகரமாக இருக்கும்.

பெண்களுக்கு வீட்டில் உள்ளவர்களுடன் கருத்து வேறுபாடு வரலாம். பொறுமையுடன், விட்டுக் கொடுத்து போகவும். ஆக. 2க்கு பிறகு புத்தாடை, நகை வாங்கலாம். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். உடல்நலம் சிறப்பாக இருக்கும்.

2017 ஜனவரி16-ஏப்ரல்13 இந்த கால கட்டத்தில் குரு பகவான் 2-ம் இடமான துலாமிற்கு அதிசாரமாக (முன்னோக்கி செல்லுதல்) வந்து நன்மை தருவார். குருவின் பலத்தால் இதுவரை இருந்த மந்த நிலை மாறும். எடுத்த செயல்களை சிறப்பாக செய்து முடிக்கலாம். பணவரவு அதிகரிக்கும். தேவையான பொருட்களை வாங்கலாம். உங்கள் மீதான அவப்பெயர் அடியோடு மறையும். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் விருந்து, விழா என்று சென்று வருவீர்கள். நீண்ட காலமாக தடைபட்ட திருமணம் கைகூடும். உறவினர்கள் வகையில் அனுகூலம் பிறக்கும். புதிய வீடு கட்ட வாய்ப்பு உண்டு. சிலரது வீடுகளில் பொருட்கள் திருட்டு போக இடமுண்டு என்பதால் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு முன்னேற்றத்துக்கான வழி கிடைக்கும். குறைந்த முதலீட்டில் புதிய தொழில் தொடங்கலாம். அரசு வகையில் அனுகூலமான போக்கு இருக்கும். கடன்வசதி கிடைக்கும்.

பணியாளர்களுக்கு வேலைப்பளு குறையும். சிலர் இழந்த பதவி மீண்டும் கிடைக்க பெறுவர். இடமாற்ற பீதி மறையும். சம்பள உயர்வு, பதவி உயர்வு ஆகியவற்றுக்கு இடம் உண்டு. படித்துவிட்டு வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.

மாணவர்கள் கடந்த ஆண்டு ஏற்பட்ட பிற்போக்கான நிலையில் இருந்து மீண்டும் முன்னேற்றத்திற்கு வழி காண்பர்.

விவசாயிகள் புதிய நிலம் வாங்கலாம். வழக்கு, விவகாரங்களில் தீர்ப்பு சாதகமாக அமையும்.

பெண்கள் குடும்பத்தில் சிறப்பு பெறுவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவருடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி மகிழ்ச்சி பிறக்கும். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். உடல்நலம் சிறப்பாக இருக்கும்.

பரிகாரம்: விநாயகர், ஆஞ்சநேயர் வழிபாடு இடையூறை அகற்றும். அதிகாலையில் விளக்கு ஏற்றுங்கள். பத்ரகாளிக்கு எலுமிச்சை மாலை சாத்துங்கள். மூதாட்டிகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள்.


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us