'ஜனநாயகன் Vs டிஎன் 2026' : விஜய்யின் இரட்டை நிலைப்பாடு
தமிழக சட்டசபைத் தேர்தல் இன்னும் இரண்டு வாரங்களில் நடைபெற உள்ள நிலையில் இரண்டு திரைப்படங்கள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. விஜய்யின் கடைசி படம் என அறிவிக்கப்பட்ட 'ஜனநாயகன்' படத்தின் சர்ச்சை கடந்த மூன்று மாதங்களாகவே உள்ளது. தணிக்கை, ரிவைசிங் கமிட்டி, நீதிமன்ற வழக்கு என பட வெளியீடு தாமதமாகி தற்போது தேர்தல் காலம் என்பதால் இன்னும் தள்ளிப் போகிறது.
அந்தப் படத்தின் வெளியீட்டை சில அரசியல் கட்சிகள் வேண்டுமென்றே தடுக்கிறது என கடந்த மூன்று மாத காலமாக சர்ச்சை எழுந்தது. பட வெளியீடு குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்த விஜய் சமீபத்தில் திருச்சியில் நடத்திய தேர்தல் பிரச்சாரத்தின் போதுதான் அது குறித்து வாய் திறந்தார். “ஜனநாயகன்' படம் பெரிய ஆயுதமா மாறிடும்னு சூழ்ச்சி செய்துள்ளனர். அதற்காக எனக்கும் நீதி வேண்டும்,” என்று பேசினார்.
தனது படத்திற்காக நீதி வேண்டும் என்று கேட்டுப் பேசிய விஜய் தரப்பு தற்போது இந்த வாரம் வெளியாக உள்ள 'டிஎன் 2026' படத்திற்கு எதிராகப் பேசி வருகிறது. அந்தக் கட்சியின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா ஏற்கெனவே இந்தப் படத்தை எதிர்த்து கருத்து தெரிவித்திருந்தார். அடுத்து படத்தை வெளியிட தடை கோரி தேசிய மக்கள் சக்தி கட்சி வழக்கு தொடுத்துள்ளது.
விஜய்க்கு ஆதரவாக ஏற்கெனவே சில வழக்குகளைத் தொடுத்த இந்தக் கட்சி விஜய் அனுமதியுடன்தான் தற்போது 'டிஎன் 2026' படத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
தனது 'ஜனநாயகன்' படத்திற்கு எதிராக சூழ்ச்சி செய்கிறார்கள் என்று பேசிய விஜய், தற்போது 'டிஎன் 2026' படம் தனக்கு எதிராகப் போய்விடுமோ என்று விஜய் ஏன் அந்தப் படத்தைத் தடுக்க முயற்சிக்க வேண்டும் என்றும் நடுநிலையாளர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். தனக்குன்னா 'ரத்தம்' எதிரிக்குன்னா 'தக்காளி சட்னியா' என்றும் சினிமா வட்டாரங்களிலும் பேச்சு எழுந்துள்ளது.