மகுடம் படப்பிடிப்பில் விஷாலுக்கு உறுதுணையாக சாய் தன்ஷிகா
நடிகர் விஷால் தற்போது மகுடம் படத்தில் கதாநாயகனாக நடிப்பதுடன் அந்த படத்தில் இயக்குனராகவும் பொறுப்பேற்று படத்தை இயக்கி வருகிறார். கடந்த சில நாட்களாக காக்கிநாடாவில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. தேர்தலன்று வாக்கு செலுத்துவதற்காக ஜான் விஜய் உள்ளிட்ட சிலருடன் சென்னை வந்த விஷால், அன்றைய தினமே மீண்டும் கிளம்பி மகுடம் படப்பிடிப்பிற்காக காக்கிநாடா சென்று விட்டார். தற்போது காக்கிநாடாவில் படமாக்க வேண்டிய காட்சிகள் அனைத்தையும் படமாக்கிவிட்டு சென்னை திரும்பி உள்ளனர் மகுடம் படக்குழுவினர்.
இது குறித்த புகைப்படம் ஒன்றை விஷால் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.. ஆச்சரியமாக இந்த புகைப்படத்தில் விஷாலின் வருங்கால மனைவியும் நடிகையுமான சாய் தன்ஷிகாவும் இடம்பெற்றுள்ளார். விஷாலுக்கும் சாய் தன்ஷிகாவுக்கும் திருமணம் உறுதி செய்யப்பட்டு விரைவில் நடிகர் சங்க கட்டடம் திறக்கப்பட்டதும் அதில் உள்ள மண்டபத்தில் அவர்கள் திருமணம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் கூடவே இருந்து விஷாலின் உடல் நலத்தை கவனித்துக் கொள்வதற்காக சாய் தன்ஷிகாவும் மகுடம் படப்பிடிப்புக்கு கிளம்பி சென்று விட்டார். இந்த தகவலை தனது நன்றி தெரிவித்தல் மூலம் உறுதிப்படுத்தி உள்ள விஷால் படக்குழுவருடன் சேர்த்து எனது வருங்கால மனைவி சாய் தன்சிகாவுக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.