உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சென்சார் விதிகளை மீறி தியேட்டரில் திரையிட்ட மலையாள படக்குழு மீது வழக்கு:

சென்சார் விதிகளை மீறி தியேட்டரில் திரையிட்ட மலையாள படக்குழு மீது வழக்கு:

கடந்த சில நாட்களுக்கு முன்பு மலையாளத்தில் அபினவ் சுந்தர் நாயக் என்பவர் இயக்கத்தில் 'மோலிவுட் டைம்ஸ்' என்கிற படம் வெளியானது. சினிமாவை பின்னணியாக கொண்டு உருவான இந்த படத்தில் பிரேமலு புகழ் நஸ்லேன் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது சென்சார் விதிமுறைகளை மீறி படத்தை திரையிட்டதாக படக்குழுவினர் மீது சென்சார் அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

படம் வெளியாவதற்கு முன்பு சென்சார் போர்டு வலியுறுத்திய காட்சிகளில் மாற்றம் செய்து, அதை சென்சார் அதிகாரிகளிடம் காட்டிய பின்னரே இந்த படத்திற்கு யு/ஏ 16 ப்ளஸ் (UA 16+) சான்றிதழ் வழங்கப்பட்டு படத்தை வெளியிட்டனர். ஆனால் தற்போது படம் ஓடும் திரையரங்குகளில் அந்த காட்சிகளில் எதுவும் மாற்றம் செய்யப்படாமலேயே திரையிடப்பட்டு வருகிறது. இந்த தகவல் அறிந்ததும் சென்சார் மண்டல அதிகாரி, சென்சார் விதிகளை மீறி இந்த படத்தை திரையிட்டதாக கூறி தயாரிப்பாளர் ஆஷிக் உஸ்மான், இயக்குனர் அபினவ் சுந்தர் நாயக் மற்றும் விநியோகஸ்தர் ஆகியோர் மீது புகார் அளித்தார். அதன் அடிப்படையில் தற்போது இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல, இந்த டிஜிட்டல் சேவையை வழங்கிய கியூப், யுஎப்ஓ போன்ற நிறுவனங்கள் மீதும், திரையரங்கு உரிமையாளர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த குற்றம் உறுதி செய்யப்பட்டால் தயாரிப்பாளருக்கு அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !